கள்ளக்காதல் ஆரம்பத்தில் ஒரு ரகசிய உறவாக இருந்தாலும், அது வெளியில் தெரிய வரும் சூழல் உருவாகும்போது பிரச்சினைகள் விபரீதமாக மாறிவிடுகின்றன. பணம், மிரட்டல் என அடுத்தடுத்து பிரச்சினைகள் அதிகரித்த நிலையில், தெலுங்கானாவில் கள்ளக்காதல் விவகாரம் இரட்டைக் கொலையில் முடிந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் சூரியபெட் மாவட்டம் மோட்டா பகுதியைச் சேர்ந்தவர் நாகுலு (48). இவரது மனைவி பூபா (41). இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி, தங்களது கணவர்களுடன் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
மகள் மற்றும் மருமகனுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக நாகுலுவும் பூபாவும் அடிக்கடி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு பணியாற்றிய காவலர் ஷெரீப்புடன் பூபாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாற, இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்து வந்துள்ளனர். இதற்கிடையில் ஷெரீப்பிடம் இருந்து ரூ.3 லட்சத்தை பூபா வாங்கியுள்ளார். அந்த பணத்தை தனது மருமகனிடம் கொடுத்துள்ளார். சில நாட்களில் ஷெரீப்பின் வீட்டில் அவருக்கு திருமண ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. இதனால் தான் கொடுத்த ரூ.3 லட்சத்தை பூபாவிடம் ஷெரீப் திரும்ப கேட்டுள்ளார்.
பணத்தை திரும்பக் கேட்டால், இருவருக்கும் இடையேயான கள்ளக்காதல் குறித்து ஷெரீப்பின் வருங்கால மனைவியிடம் சொல்லிவிடுவேன் என பூபா மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷெரீப், பூபாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். வங்கியில் ஆடு கடன் வாங்கித் தருவதாகக் கூறி பூபாவை அழைத்த ஷெரீப், அதிகாரிகள் ஆட்டுக்கொட்டகையை ஆய்வு செய்ய வருவதாகக் கூறி அதை தயார் செய்யச் செய்துள்ளார். ஏற்கனவே ஒரு முறை கொலை செய்யும் நோக்கத்துடன் ஆட்டுக்கொட்டகைக்கு சென்றபோதும், அங்கு ஆட்கள் இருந்ததால் தனது திட்டத்தை கைவிட்டுள்ளார்.
இதையடுத்து நாகுலு மற்றும் பூபா இருவரையும் கொலை செய்ய முடிவு செய்த ஷெரீப், முதலில் நாகுலுவை கொலை செய்து, அவரது உடலை எரு எரியூட்டும் குழியில் போட்டு புதைத்துள்ளார். பின்னர் பூபாவின் வீட்டுக்குச் சென்ற ஷெரீப், அவரை ஆட்டுக்கொட்டகைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் தனியாக இருந்த பின்னர், பூபாவை கட்டையால் தலையில் தாக்கி கொலை செய்துள்ளார். அவரது உடலையும் அங்கேயே புதைத்துள்ளார். இந்த இரட்டைக் கொலை சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் விசாரணை தொடங்கியது. விசாரணையின் முடிவில் ஷெரீப்பை கைது செய்த போலீசார், கொலைக்கான காரணம் மற்றும் சம்பவம் தொடர்பான முழு பின்னணி குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: கள்ளக்காதல் விவகாரம்… காதலி தற்கொலை; அதிர்ச்சியில் காதலன் எடுத்த விபரீத முடிவு!



