2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேலில் நடைபெற்ற தாக்குதலின்போது ஹமாஸ் மற்றும் பிற பாலஸ்தீனிய ஆயுதக் குழுக்கள் திட்டமிட்டு பாலியல் வன்முறைகளை மேற்கொண்டதாக சுயாதீன இஸ்ரேலிய விசாரணை அறிக்கை பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. 300 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை, பெண்கள் மட்டுமின்றி குடும்பங்கள் மற்றும் சமூகங்களையே உளவியல் ரீதியாக சிதைக்கும் நோக்கில் பாலியல் வன்கொடுமை பயன்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டுகிறது.
உயிர் பிழைத்தவர்கள், முன்னாள் பணயக்கைதிகள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகள் உள்ளிட்டோரிடம் நடத்தப்பட்ட 430-க்கும் மேற்பட்ட நேர்காணல்கள், 10,000-க்கும் அதிகமான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தாக்குதலின் போது சுமார் 1,200 பேர் உயிரிழந்ததுடன், 251 பேர் பணயக்கைதிகளாக கடத்தப்பட்டனர்.
அறிக்கையின்படி, பெண்கள் உயிருடன் இருந்தபோதும், உயிரிழந்த பின்னரும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாக சாட்சிகள் தெரிவித்துள்ளனர். கற்பழிப்பு, உடல் சிதைப்பு, நிர்வாணப்படுத்தி அவமதித்தல் போன்ற கொடூரங்கள் நடைபெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது. சில சம்பவங்களில் பாலியல் வன்கொடுமைக்கு பின்னர் பெண்கள் கொல்லப்பட்டதாகவும், உடல்கள் வெற்றிச் சின்னங்களாக காட்சிப்படுத்தப்பட்டதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும், குடும்ப உறுப்பினர்களை மனரீதியாக சிதைக்கும் நோக்கில் உறவினர்கள் ஒருவருக்கொருவர் பாலியல் செயல்களில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், சில பணயக்கைதிகள் கடத்தல் காரர்களுடன் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்படுவார்கள் என மிரட்டப்பட்டதாகவும் விசாரணையில் கூறப்பட்டுள்ளது.
காசா எல்லைக்கு அருகே நடைபெற்ற நோவா இசை விழாவில் இந்த கொடூரங்களில் பெரும்பாலானவை நடந்ததாக அறிக்கை குறிப்பிடுகிறது. அந்த விழாவில் மட்டும் 370-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தாக்குதல்களுக்குப் பின்னரும், காசாவில் உள்ள சுரங்கங்கள் மற்றும் பாதுகாப்பு வீடுகளில் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த காலத்திலும் பாலியல் வன்முறைகள் தொடர்ந்ததாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பணயக்கைதிகள் சிலர், சிறைவாசத்தின் போது உடலின் மீது தங்களுக்கே கட்டுப்பாடு இல்லாத உணர்வு கடுமையான உளவியல் பாதிப்பை ஏற்படுத்தியதாக சாட்சியம் அளித்துள்ளனர். பெண்கள் மட்டுமின்றி ஆண்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்களும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாக அறிக்கை கூறுகிறது.
இந்தச் சம்பவங்கள் போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைச் செயல்களாக கருதப்படலாம் என விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. “பாலியல் வன்முறை என்பது திட்டமிட்டு பயன்படுத்தப்பட்ட ஒரு போர் உத்தி” என்று விசாரணைக் குழு நிறுவனர் கோச்சாவ் எல்காயாம்-லெவி கூறியுள்ளார்.
Read more: CM விஜய் உண்மையில் என்ன படித்தார்..? பலருக்கும் தெரியாத வாழ்க்கை ரகசியங்கள்..!



