அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள புரூக் உயர்நிலைப் பள்ளியில், மாணவிகள் மற்றும் நடனக் குழுவினர் உடை மாற்றும் அறைகளில் ரகசியக் கேமராக்களைப் பொருத்திய குற்றத்திற்காக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் எரிக் ஜேம்ஸ் (53) காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
பள்ளியின் பாதுகாப்புப் பிரிவு ஊழியர் ஒருவர், பேனா வடிவிலான மர்ம பதிவுக்கருவி இருப்பதை முதலில் கண்டறிந்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த புரூக் கவுண்டி ஷெரிப் மற்றும் காவல்துறையினர் நடத்திய தீவிர ஆய்வில், உடற்பயிற்சிக் கூட உடை மாற்றும் அறை மற்றும் நடனக் குழுவினர் அறைகளில் இருந்து பேனா மற்றும் சாவிக்கொத்து வடிவிலான 4 ரகசியக் கேமராக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைப்பற்றப்பட்ட சாதனங்களின் பதிவுகளை ஆய்வு செய்தபோது, தலைமை ஆசிரியர் எரிக் ஜேம்ஸே கேமராவைத் தரையில் வைத்து கோணத்தைச் சரிசெய்த காட்சிகள் பதிவாகியிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தான்தான் அந்த ரகசியக் கேமராக்களை அங்கு வைத்ததாக ஜேம்ஸ் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, பள்ளி முடிந்து மாணவர்கள் சென்ற பிறகு அவரை வளாகத்திலேயே வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளிலும் சிறப்பு மின்னணு சோதனைகள் நடத்தப்பட்டன.
2023 முதல் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்த எரிக் ஜேம்ஸை நிர்வாகம் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்துள்ளது. தற்போது ஒரு லட்சம் டாலர் பிணைத் தொகையுடன் வடக்கு மண்டல சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தாலும் மின்னணு கண்காணிப்பு வளையத்துடன் கூடிய வீட்டுக் காவலில் வைக்கப்படுவார் என நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.



