அதிமுக ஆட்சி அமைந்ததும் திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரிக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப்பயணத்தில் நேற்று மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: மதுரை மாவட்டம் அதிமுக கோட்டை. கடந்த தேர்தலில் சூழ்ச்சி செய்து சில தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. அடுத்த ஆண்டு தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டது. போதைப் பொருள் நடமாட்டத்தால் மிக மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ளது. தமிழகத்தில் ஊழல் இல்லாத துறைகளே இல்லை.
மதுரை மாநகராட்சி சொத்துவரியில் ரூ.200 கோடி அளவில் ஊழல் நடந்துள்ளது. இதற்கு காரணமான மேயரை கைது செய்யாமல் அவரது கணவரை கைது செய்துள்ளனர். ஊழல்வாதிகளைக் காப்பாற்ற அரசு முயற்சி செய்கிறது. அதிமுக ஆட்சி அமைந்ததும் இந்த ஊழல் குறித்து விசாரிக்கப்படும். வரி வருவாயை மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளுக்குப் பயன்படுத்த வேண்டும். அதைச் செய்யாமல் வரி வருவாயை திமுகவினரே பங்கிட்டுக் கொள்கின்றனர். இந்தச் சூழலில் மதுரை மாநகராட்சி ரூ.260 கோடி கடன் வாங்க முடிவு செய்துள்ளது.
இந்தக் கடனை மக்கள்தான் திரும்பச் செலுத்த வேண்டும். திமுக நடத்துவது ஊழல் அரசு என்பதற்கு மதுரை மாநகராட்சி ஊழல் சாட்சியாக உள்ளது. பணத்தைப் பங்கு போடுவதில் திமுக கவுன்சிலர்கள் இடையே மோதல் இருப்பதால் கோவை, காஞ்சிபுரம், நெல்லை மாநகராட்சி மேயர்களை மாற்றியுள்ளனர் என்றார்.