காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட விச்சாந்தாங்கல் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு அங்காளம்மன் கோவில் கடைசி நாள் திருவிழா நடந்தது இந்த திருவிழாவில் மாட்டு வண்டியில் வைத்து சாமி ஊர்வலம் நடத்தப்பட்டது.
அப்போது மாட்டு வண்டியின் பின்புறம் மாட்டு வண்டியில் வண்ண விளக்குகள் எரிவதற்காக ஜெனரேட்டர் பொருத்தப்பட்டிருந்தது. சாமி ஊர்வலத்தின் பின்புறமாக சென்னை சேர்ந்த சரவணன் என்பவரின் மகளான லாவண்யா(13) என்ற சிறுமி மாட்டு வண்டியின் பின்னால் ஏரி அமர்வதற்கு முயற்சி செய்தபோது அங்கு இருந்து ஜெனரேட்டரில் லாவண்யாவின் தலைமுடி மாட்டிக் கொண்டது.
இதில் லாவண்யா தலைமுடியோடு சேர்த்து இழுக்கப்பட்டதில், படுகாயமடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சிக்குள்ளான கிராம மக்கள் அந்த சிறுமியை தூக்கி சென்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனாலும் அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிந்த காவல்துறையினர் ஜெனரேட்டர் உரிமையாளர் முனுசாமி என்பவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.