ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA) வெளியிட்ட தகவலின்படி, இந்த நிலநடுக்கம் திங்கள்கிழமை அதிகாலை 05:24 மணிக்கு (இந்திய நேரப்படி 01:54 மணி) மத்திய டோகாச்சி பகுதியில் ஏற்பட்டுள்ளது.
நில அதிர்வின் தீவிரம் ஜப்பானிய அளவுகோலில் “5+” எனப் பதிவாகியுள்ளது. அதே பகுதியில் சில இடங்களில் “5-” என்ற அளவிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் அமைதியாக இருக்கவும், தேவையற்ற பீதி அடைய வேண்டாம் என்றும் ஜேஎம்ஏ அறிவுறுத்தியுள்ளது. மேலும், பின்அதிர்வுகள் (aftershocks) ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையாக இருக்குமாறு குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்துக்குப் பிறகு இதுவரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பெரிய அளவிலான உயிரிழப்புகள் அல்லது கடுமையான சேதங்கள் குறித்த தகவல்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் நிலைமையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
சமீபத்தில் ஜப்பானின் வடகிழக்கு பகுதிகளில் 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த நிலையில், அதன் தாக்கம் இன்னும் முழுமையாக குறையாத சூழலில் இந்த புதிய அதிர்வு பதிவாகியுள்ளது. அந்த முன்னைய நிலநடுக்கத்தையடுத்து சில பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது, மேலும் சில இடங்களில் சுனாமி அலைகளும் பதிவாகின.
அணுமின் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகளில் தற்போது எந்த அசாதாரண நிலையும் பதிவாகவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அதேவேளை, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக சில ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. ஜப்பான் பிரதமர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் உயரமான மற்றும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். நிலைமையை அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more: செருப்பை காணிக்கையாக பெற்றுக் கொள்ளும் சொரிமுத்து அய்யனார்.. தமிழகத்தின் வித்தியாசமான கோவில்!



