ஈரோடு மாவட்டம், அந்தியூர் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மாற்று கட்சியினர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் கட்சியான திமுக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஆகியவை மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மத்தியில் ஆளும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. ஆனால் இந்த கூட்டணி அமைந்தது முதல் பெரும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
பாஜகவுடன் கூட்டணி வைத்து தமிழ்நாட்டு மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்து விட்டதாகவும், பாஜகவிடம் அதிமுகவை அடகு வைத்து விட்டதாகவும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன. மேலும் அதிமுக, பாஜக கூட்டணி வெற்றி பெற்றாலும் அமித்ஷா சொல்வதைத்தான் எடப்பாடி பழனிசாமி கேட்க வேண்டும் என பாஜக நிபந்தனை விதித்துள்ளதாகவும் பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.
பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் செங்கோட்டையன் அல்லது எஸ்.பி வேலுமணிக்கு முதல்வராக்க பாஜக திட்டம் திட்டி உள்ளதாக சமீபத்தில் திமுகவில் இணைந்த அன்வர் ராஜா கருத்து தெரிவித்திருந்தார். அதேபோல செங்கோட்டையன் பாஜகவில் இணைய உள்ளார் என்ற தகவலும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அதிமுகவில் அதிரடி அரசியலை செங்கோட்டையன் தொடங்கியுள்ளார். அந்தியூரில் நேற்று 100-க்கும் அதிகமான மாற்று கட்சியினரை அதிமுகவில் இணைத்துள்ளார். இதன் மூலம் ஈரோடு தனது கோட்டை என்பதை 2026 தேர்தலில் நிரூபிக்க, செங்கோட்டையன் ஆட்டத்தை தொடங்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி உடன் அதிருப்தி, பாஜகவில் இணைய உள்ளார் என்ற வதந்திகளுக்கு எல்லாம் செங்கோட்டையன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.



