திருச்சி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் 17 வயது சிறுவனுடன் பெண் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் இருந்து திருச்சி நோக்கி கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் திருச்சியின் லால்குடி மற்றும் காட்டூர் பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் திடீரென அந்த ரெயில் முன்பு பாய்ந்துள்ளனர். இதில், பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருத்தாசலம் ரெயில்வே இன்ஸ்பெக்டர் பிருந்தா, தலைமையிலான போலீசார், 2 பேரின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழந்த பெண், திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டையை அடுத்துள்ள போதாவூர் கிராமத்தை சேர்ந்த 26 வயதான புவனேஸ்வரி என்பது தெரியாந்துள்ளது. உயிரிழந்த ஆண், திருச்சியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், புவனேஸ்வரிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், இவருக்கு 9 வயதான மகள் மற்றும் 7 வயதான மகனும் உள்ளனர். புவனேஸ்வரிக்கும், அவரது உறவினரான 17 வயது சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் அந்த சிறுவன் கடைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதே சமயம், புவனேஸ்வரி தனது கணவரிடம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். இதையடுத்து கள்ளக்காதலர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஊர் சுற்றியுள்ளனர். பின்னர், மணக்கால் ரெயில்வே கேட் பகுதிக்கு சென்ற இருவரும், மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read: மதுரையில் கோர விபத்து… நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 5 பேர் உயிரிழப்பு!



