நேபாளத்தில் சமீபத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய திடீர் வெள்ளப் பேரழிவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே, அந்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க பாலஞ்சோக் பகவதி அம்மன் சிலையில் இருந்து நீர்த்துளிகள் கசிந்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்ததாக பக்தர்கள் தெரிவித்துள்ள தகவல் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
கவ்ரேபலாஞ்சோக் மாவட்டத்தின் மலை உச்சியில் அமைந்துள்ள இத்திருக்கோயில், கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் மன்னர் மானதேவா ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்டதாகக் கருதப்படும் நாட்டின் மிக சக்திவாய்ந்த பழமையான சக்தி பீடமாகும். சுமார் 1,300 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த இக்கோயிலில், ஒரே கருங்கல்லில் நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட 3 அடி உயரமும், 18 திருக்கரங்களும் கொண்ட பாலஞ்சோக் பகவதி அம்மன் நேபாளத்தின் பிற பகவதி அம்மன் கோயில்களுக்கு மூத்த சகோதரியாகப் போற்றப்படுகிறார்.
நாட்டைப் பாதுகாக்கும் தெய்வமாக வணங்கப்படும் இத்தலத்தில், இந்து வேத மந்திரங்களுடன் பௌத்த தாந்திரீக வழிபாட்டு முறைகளும் ஒருங்கிணைந்து பின்பற்றப்படுவது தனித்துவமான ஆன்மீக அமைப்பாகும். குறிப்பாக, ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற ‘தசைன்’ (Dashain) திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் குடும்ப நலன் மற்றும் பாதுகாப்பு வேண்டி இங்கு குவிவது வழக்கம்.
இந்நிலையில், சமீபத்திய பேரிடருக்கு முன்பாக அம்மன் சிலையில் வியர்வை போன்ற நீர்த்துளிகள் தென்பட்டதாகக் கூறும் உள்ளூர் மக்கள், இதற்கு முன்னதாக 1972, 1988 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த கொடூர நிலநடுக்கங்கள் மற்றும் பேரழிவுகளுக்கு முன்பாகவும் இதே போன்ற அறிகுறிகள் சிலையில் வெளிப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
எனினும், பனிப்பாறை உருகுதல், வளிமண்டலத்தில் ஏற்படும் தீவிர ஈரப்பதம் மற்றும் பாறைச் சிலைகளின் தட்பவெப்ப மாறுபாடுகளால் நீராவி சுருங்கி நீர்த்துளிகளாகப் படிவதே இதற்கு அறிவியல் காரணம் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அறிவியல் விளக்கங்கள் ஒருபுறமிருக்க, மக்களைக் காக்கும் அன்னையின் முன் எச்சரிக்கை உணர்த்தலாகவே இதனைப் பக்தர்கள் ஆழ்ந்த நம்பிக்கையுடன் பார்க்கின்றனர்.
Read More : முல்லைப்பெரியாறு அணை உடையப் போகுதா? கேரள மாநிலமே அழியும் அபாயம்..!! தமிழக விவசாயிகள் எச்சரிக்கை..!!



