தமிழகத்தில் புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நடிகரும் தயாரிப்பாளருமான விஷால் வெளியிட்ட பதிவு தற்போது திரையுலகத்தில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து புதிய திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் சினிமாட்டோகிராஃப் சட்டத் துறை அமைச்சராக ராஜ்மோகன் நியமிக்கப்பட்டிருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ளார். திரையுலகை நேரடியாக அனுபவிக்காத ஒருவர் சினிமா துறையின் பிரச்சனைகளுக்கு எப்படி தீர்வாக இருப்பார் என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
திரையுலகம் கடுமையான நஷ்டத்தையும் நெருக்கடியையும் சந்தித்து வருவதாகவும் குறிப்பிட்டார். அதே நேரத்தில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பணியாற்றிய அனுபவம் கொண்ட முதலமைச்சர் விஜய்யே இந்தத் துறையின் பிரச்சனைகளை நன்கு புரிந்தவர் என்றும், அவரே நேரடியாக வழிகாட்ட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
திரையுலகின் 3 முக்கிய கோரிக்கைகள்: விஷால் தனது பதிவில் திரையுலகம் சார்பாக நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மூன்று முக்கிய கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்:
அரசு இ-டிக்கெட் முறை: திரைப்பட டிக்கெட் விற்பனையை அரசு நேரடியாக ஒரே இணையதளம் அல்லது செயலி மூலம் நடத்த வேண்டும். இதனால் கூடுதல் கட்டண சுமை குறைந்து, அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி வரி ரத்து: ஜி.எஸ்.டி.க்கு மேலாக சினிமாவுக்கு விதிக்கப்படும் உள்ளாட்சி வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். “ஒரே நாடு ஒரே வரி” என்ற நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் இரட்டை வரி விதிப்பு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறு படங்களுக்கு மானியம் உயர்வு: சிறிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் அரசு மானியத்தை தற்போதைய பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப உயர்த்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தக் கோரிக்கைகள் கடந்த 9 ஆண்டுகளாக தொடர்ந்து வைக்கப்பட்டு வந்தாலும், இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என்று விஷால் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசில் இதற்காவது தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு திரையுலகில் நிலவுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். “திரையுலகின் வலியை உணர்ந்தவர் முதலமைச்சர் விஜய் என்பதால், அவரால் மட்டுமே இதற்கு சரியான தீர்வு கிடைக்க முடியும்” எனவும் அவர் உருக்கமாக கூறியுள்ளார்.



