ஒரு சிலர் தங்கள் பிள்ளைகளை ஆடம்பரமான, ஏசி அறைகளுடன் கூடிய பள்ளிகளில் சேர்த்துவிடுகின்றனர். மேலும், விதவிதமான விலை உயர்ந்த உணவுப் பொருட்களை, மிகவும் காஸ்ட்லியான உணவுப் பெட்டிகளில் அடைத்து அனுப்புகின்றனர். அவர்கள் கொண்டு செல்லும் உணவுகள், அவர்களின் ஸ்டேட்டஸை குறிக்கும் அளவிற்கு வித்தியாசமாக இருக்கும். இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் அங்கன்வாடி மையங்களையும், அங்கு வழங்கப்படும் சத்துணவுகளையும் மட்டுமே நம்பி வாழும் குடும்பங்களும் உள்ளனர்.
ஒரு வேளை உணவுக்கே திண்டாடும் குழந்தைகள் கூட, அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும் உணவை சாப்பிட்டு, அங்கு வழங்கப்படும் முட்டைகள் உள்ளிட்ட உணவுகளால் ஆரோக்கியம் பெறுகின்றனர். ஆனால் தற்போது, விளாத்திகுளத்தில் நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ரெகுராமபுரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு தினமும் சுமார் 20 குழந்தைகள் வந்து செல்கின்றனர். அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வியாழன் ஆகிய 3 நாட்கள் முட்டை வழங்கப்படுகிறது. நேற்று முன்தினம் ஒரு வயதான குழந்தையின் பெற்றோரிடம் அங்கன்வாடி ஊழியர், 3 முட்டைகளை வழங்கியுள்ளார். இந்த முட்டைகளில் ஒரு முட்டையை நேற்று குழந்தையின் பெற்றோர் உடைத்து பார்த்தபோது அதில் கோழிக்குஞ்சு இறந்து அழுகிப்போய் இருந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர், இதையடுத்து கோழிக்குஞ்சுடன் அழுகிய நிலையில் இருந்த முட்டையை அங்கன்வாடி மையத்திற்கு எடுத்துச் சென்று ஊழியரிடம் காண்பித்துள்ளனர். ஆனால் அங்கிருந்த அங்கன்வாடி ஊழியர் ‘’இந்த முட்டை எங்கு வாங்கியது’’ என்று அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், ‘’அங்கன்வாடி மையத்தை முறையாக பராமரிப்பது இல்லை. குழந்தைகளுக்கு எதுவும் சொல்லித் தருவதும் இல்லை. சாப்பாடு முறையாக சுத்தமாக வழங்குவது கிடையாது. முறையான குடிநீர் வசதி இல்லை. குடிநீர் தொட்டியை சுத்தம் செய்வது இல்லை” என்று கூறியுள்ளனர்.
மேலும், சிறுவர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்களும் பழுதாகி கிடக்கிறது. மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விரிசல் விழுந்த கட்டிடத்தை விரைவாக சீரமைக்க வேண்டும் என்று பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் மற்ற குழந்தைகளின் பெற்றோருக்கு, தங்களின் குழந்தைகளுக்கு சத்துணவு கொடுக்க அச்சம் ஏற்பட்டுள்ளது.



