தென்காசி மாவட்டத்தில் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த 8 வயது சிறுமி, சாலையை கடக்க முயன்றபோது சுமை ஆட்டோ மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 17 வயது சிறுவன் மற்றும் வாகன உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கரும்புளியூத்து கிராமத்தைச் சேர்ந்த பீட்டரின் 8 வயது மகள் ஜீவிதா, மாறாந்தையில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிய சிறுமி, வழியில் கடைக்குச் சென்றுவிட்டு சாலையை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த சுமை ஆட்டோ மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார்.
சம்பவத்தை கண்ட பொதுமக்கள் உடனடியாக சிறுமியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஜீவிதா பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், சுமை ஆட்டோவை ஓட்டியதாகக் கூறப்படும் 17 வயது சிறுவனையும், வாகனத்தின் உரிமையாளர் கணேசனையும் கைது செய்து, விபத்துக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read: பெண் நோயாளிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவர்; வீடியோ வெளியிட்ட நர்ஸ்…



