பிரதமர் நரேந்திர மோடி தங்க நகைகள் வாங்குவதை குறைக்குமாறு விடுத்துள்ள வேண்டுகோள், இந்திய நகைத் தொழில்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று தொழில்துறை பிரதிநிதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த கருத்தை அகில இந்திய இரத்தினக்கல் மற்றும் ஆபரண உள்நாட்டுக் கவுன்சிலின் தலைவர் ராஜேஷ் ரோக்டே தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், தங்க நகைத் துறை நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருவதாகவும், இதை பாதிக்கும் எந்தவொரு கட்டுப்பாடும் பெரிய அளவிலான வேலை இழப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.
மேற்கு ஆசியாவில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றம், அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை உள்ளிட்ட சூழ்நிலைகளுக்கு மத்தியில், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கவும், தேவையற்ற வெளிநாட்டு பயணங்களை தவிர்க்கவும், ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை நிறுத்துமாறு பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதுகுறித்து ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய ரோக்டே, “தேச நலன் கருதி பிரதமர் கூறுவது சரியானது” என கூறினார்.
அதே நேரத்தில், இந்தியாவில் தங்க நகைகளுக்கு ஆழமான கலாச்சார முக்கியத்துவம் உள்ளதாகவும், முழுமையாக தங்க நகை வாங்குவதை கட்டுப்படுத்துவது பொருளாதார செயல்பாடுகளை பாதிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார். முதலீட்டு நோக்கில் தங்கம் வாங்குவதை குறைக்க வேண்டும் என்ற கருத்தை அவர் ஆதரித்தார்.
ரோக்டேவின் கூற்றுப்படி, நகைத் தொழில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 7 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. இதன் மூலம் கலைஞர்கள், நகை கடை ஊழியர்கள், வடிவமைப்பாளர்கள் உள்ளிட்டோர் பெருமளவில் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
மேலும் காப்பீடு, வங்கி, பேக்கேஜிங், தளவாடம் உள்ளிட்ட பல துறைகளும் நகைத் துறையுடன் நேரடி தொடர்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். “நகைத் துறையில் கட்டுப்பாடுகள் வந்தால் அது பெரிய அளவிலான வேலை இழப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது” என்றும் அவர் எச்சரித்தார்.
அதே நேரத்தில், தங்க கட்டிகள் மற்றும் நாணயங்களில் முதலீட்டை குறைக்கும் முயற்சிகளை அவர் ஆதரித்துள்ளார். மேலும் தங்க பணமாக்கல் திட்டம் (Gold Monetisation Scheme) மூலம் இந்தியாவில் உள்ள பெருமளவு தங்கத்தை பொருளாதார வளர்ச்சிக்காக பயன்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.
அவர் தெரிவித்த மதிப்பீட்டின் படி, இந்திய குடும்பங்களில் சுமார் 40,000 முதல் 50,000 டன் வரை தங்கம் இருப்பதாக கருதப்படுகிறது. இதில் 10–20 சதவீதம் கூட பணமாக்கப்பட்டால், தங்க இறக்குமதி சார்பு பெரிதும் குறையலாம் என்றும் அவர் கூறினார். இந்நிலையில், பிரதமரின் வேண்டுகோள் மற்றும் புவிசார் அரசியல் சூழ்நிலைகள் காரணமாக நகை நிறுவன பங்குகள் பங்குச்சந்தையில் அழுத்தம் சந்தித்தன. Titan Company Limited பங்கு 6% க்கும் மேல் சரிந்தது.
அதேபோல் Kalyan Jewellers India Limited மற்றும் PNG Jewellers பங்குகள் சுமார் 8% வரை வீழ்ச்சியடைந்தன. Thangamayil Jewellery Limited பங்கு சுமார் 4% சரிந்தது.
மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம் மற்றும் ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக கச்சா எண்ணெய் விலை சுமார் 4 சதவீதம் உயர்ந்து, ஒரு பீப்பாய்க்கு சுமார் 105 அமெரிக்க டாலராக உயர்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



