தமிழ் திரையுலகில் நடிகையாகவும், மாடலாகவும் அறியப்படும் சனம் ஷெட்டி, பல திரைப்படங்களில் நடித்ததுடன், சமூக விவகாரங்கள் தொடர்பான கருத்துகளையும் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற அவர், மேடையில் பேசும்போது ஏற்பட்ட சர்ச்சை குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில், நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து போராட்டம் நடத்தினர். இதில் கலந்து கொண்ட சனம் ஷெட்டி, மாணவர்களுக்கு ஆதரவாக தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “இது மாணவர்களுக்காக மாணவர்கள் நடத்தும் போராட்டம் என்ற அடிப்படையில்தான் நான் கலந்து கொண்டேன். ஒரு பொதுமகளாக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வந்துள்ளேன். இந்த மேடையை அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்தக் கூடாது” என்று தெரிவித்தார். மேலும், தான் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை என்றும், சமீபத்தில் அவரது திரைப்படத்தை பார்த்ததாகவும் சனம் ஷெட்டி குறிப்பிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் குரல் எழுப்பிய நிலையில், அவர் தொடர்ந்து தனது கருத்தை பதிவு செய்தார்.
இதையடுத்து, அவர் பேசிக் கொண்டிருந்தபோது மைக் வாங்கப்பட்டதாகவும், இதனால் அதிருப்தி அடைந்த அவர் மேடையில் இருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சனம் ஷெட்டி, “கருத்து தெரிவிக்கும் உரிமை அனைவருக்கும் உள்ளது. ஆனால், நான் பேசிக் கொண்டிருந்தபோது மைக்கை பறித்தது ஜனநாயக முறையல்ல. மாணவர்களுக்காக நடைபெறும் போராட்டம் என்ற பெயரில் அரசியல் சார்ந்த கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. எனது கருத்தை தெரிவிப்பதற்கான சுதந்திரம் மறுக்கப்பட்டது” என்று குற்றம்சாட்டினார்.
மேலும், மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை கண்டிப்பதாகவும், உரிய அனுமதி பெற்று போராட்டங்கள் நடத்துவதில் எந்த தடையும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். இதற்கிடையில், போராட்டக்குழுவினர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பேசும் வாய்ப்பு வழங்கப்படுவதாகவும், ஆனால் மேடையில் தெரிவிக்கப்படும் கருத்துகளை எப்படி எடுத்துக் கொள்வது என்பதுதான் முக்கியம் என்றும் தெரிவித்தனர்.
Also Read: எச்சரிக்கை!! செல்போனில் பலான படம் பார்த்த நபருக்கு வந்த போன் கால்; பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…



