கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி நாச்சிமுத்து கவுண்டர் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார்(42). இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு ஹோட்டலில் பணியாற்றி வந்தபோது அங்கு பணிபுரிந்து ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு அந்த பெண் மற்றும் அவருடைய 14 வயது மகள் முத்துக்குமார் உள்ளிட்ட மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இத்தகைய நிலையில், மனைவி வீட்டில் இல்லாத சமயத்தில் அந்த சிறுமிக்கு முத்துக்குமார் பாலியல் துன்புறுத்தல் வழங்கியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த சிறுமி புகார் வழங்கியதை தொடர்ந்து காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முத்துக்குமாரை கடந்த 2020 ஆம் வருடம் மே மாதம் 25ஆம் தேதி கைது செய்தனர்.
இந்த வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்ஸோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் நீதிபதி ஜி.குலசேகரன் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் முத்துக்குமாருக்கு 7 ஆண்டுகால சிறை தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் உள்ளிட்டவை விதிக்கப்பட்டது.