திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, மதுபோதையில் தொடர்ந்து தகராறு செய்து வந்த கணவனை மனைவி வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவனை கொலை செய்த பின்னர் மனைவி நேரடியாக காவல் நிலையத்துக்குச் சென்று சரணடைந்துள்ளார்.
வாணியம்பாடி அடுத்த இளையநகரம் ஊராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (43). இவரது மனைவி ரம்யா (35). தம்பதிக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில், இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். குமாருக்கு மதுப்பழக்கம் இருந்ததால், அவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், சம்பவத்தன்று நள்ளிரவில் மது போதையில் வீட்டுக்கு வந்த குமார், மீண்டும் ரம்யாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ரம்யா வீட்டில் இருந்த கத்தியை எடுத்து குமாரின் கழுத்து மற்றும் மார்பு பகுதியில் தாக்கியுள்ளார்.
பலத்த காயமடைந்த குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து ரம்யா வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்துக்குச் சென்று கணவனை கொலை செய்ததாக தெரிவித்து சரணடைந்துள்ளார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று குமாரின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ரம்யாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்ஷய் அனில் வாகரே சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
மதுபோதையில் கணவன் தொடர்ந்து தகராறு செய்து வந்த நிலையில், குடும்பப் பிரச்சினை கொலையில் முடிந்து, மனைவியே கணவனை வெட்டிக் கொன்ற சம்பவம் வாணியம்பாடி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: LPG சிலிண்டர் வாடிக்கையாளர்களே கவனம்! ஆகஸ்ட் 23-க்குள் இந்த வேலையை முடிக்கணும்; இல்லையெனில் சிக்கல்!



