பாஜக தலைமை மீது அதிருப்தியில் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிறு சிறு பிரச்சனைகள் களையப்படும். டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க இயலாது என அமித் ஷாவிடம் தெரிவித்துவிட்டேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை; தமிழகத்தில் 2026-ம் ஆண்டு மக்களுக்கு நல்ல வித்தியாசமான ஆட்சியை கொடுக்க வேண்டும் என்பதே தேசிய ஜனநாயக கூட்டணியின் இலக்கு என டிடிவி தினகரனிடம் வேண்டுகோள் வைத்துள்ளேன். அதேபோல் மற்ற தலைவர்களும் வைத்துள்ளனர். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இருவரும் மிகப் பெரிய மனிதர்கள். இருவரிடத்திலும் தங்கள் முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டுகோள் வைத்துள்ளேன்.
எனக்கு பாஜக தலைமை மீது எந்தவிதமான அதிருப்தியும் இல்லை. சிலர் பரப்பும் செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை. என்னைச் சுற்றி தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்க சிலர் முயற்சி செய்கிறார்கள். அதற்காகவே தலைமை மீது அதிருப்தி உள்ளது என போலியான தகவல்கள் பரப்பப்படுகின்றன. ஆனால் அது முற்றிலும் தவறு. நான் கட்சித் தலைமை மீது முழு நம்பிக்கையுடன் உள்ளேன் என்றார்.



