திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கொண்டரங்கி, ஆன்மிகமும் இயற்கை அழகும் இணைந்த அபூர்வ தலமாக பக்தர்களால் போற்றப்படுகிறது. சித்தர்களும் மகான்களும் சூட்சும வடிவில் இங்கு அருள்பாலிக்கின்றனர் என்ற நம்பிக்கையால், தினமும் ஏராளமானோர் இந்த மலைக்கு வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
சுமார் 3,850 அடி உயரம் கொண்ட இந்த மலை, அமைதியும் ஆன்மிகத் தன்மையும் நிறைந்த இடமாக விளங்குகிறது. மலையின் வடிவமே சிவலிங்கத்தை ஒத்த தோற்றமளிப்பதால், முழு மலையையும் சிவரூபமாக கருதி வழிபடும் மரபு இங்கு நிலவுகிறது. பக்தர்கள் ஏறிச் செல்ல வசதியாக பாறைகளை வெட்டி படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
மலையின் உச்சியில் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கும் மல்லிகார்ஜுன சுவாமி தரிசனம், முக்தியும் மோட்சமும் அளிக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர். இந்த மலை, மகாபாரதம் காலத்துடன் தொடர்புடையதாகவும் கருதப்படுகிறது. பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தின் போது இங்கு தங்கி ஈசனை வழிபட்டதாகவும், குறிப்பாக அர்ஜூனா இங்கு தவம் செய்ததாகவும் தல வரலாறு கூறுகிறது. அந்த இடத்தில் தியானம் செய்தால் சிவனருள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்றும் பக்தர்களிடையே நிலவுகிறது.
மேலும், காகபஜேந்திரர் எனப்படும் முனிவர் காக வடிவில் இங்கு தவம் செய்ததாகவும், இன்றும் புயல் வடிவில் வந்து ஈசனை வழிபடுகிறார் என்ற நம்பிக்கையும் பரவலாக பேசப்படுகிறது. மாலை நேரங்களில் திடீரென எழும் சிறிய புயல் கோயிலுக்குள் நுழையும் நிகழ்வு, பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
மலையில் பல குகைகள் காணப்படுகின்றன. இக்குகைகளில் சித்தர்கள் தியானம் செய்ததாகவும், இன்றும் அரூப வடிவில் தங்கியிருப்பதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர். மன அமைதியும் ஆன்மிக உயர்வும் நாடுபவர்களுக்கு இந்த மலை சிறந்த தியான தலமாக விளங்குகிறது. மேலும், இங்கிருந்து பழனி மலை தெளிவாகக் காணப்படுவது கூட இந்தத் தலத்தின் தனிச்சிறப்பாகும்.



