குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கற்றுக்கொடுப்பதற்காக பள்ளிகளில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், ஜங்க் ஃபுட் சாப்பிடுவதால் வயிற்றுக்குள் புழுக்கள் உருவாகும் வகையில் நடத்தப்பட்ட வித்தியாசமான வகுப்பறை செய்முறை தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
39 விநாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு ஜங்க் ஃபுட் உணவுகளால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கும் வகையில் வித்தியாசமான செய்முறை ஒன்றை நடத்துகிறார். சிப்ஸ், பிஸ்கட், சாக்லேட் போன்ற உணவுகளை சாப்பிட்டால் வயிற்றுக்குள் புழுக்கள் இருப்பதைப் போன்ற காட்சியை மாணவர்களுக்கு காட்டுகிறார்.
ஸ்கேன் கருவி போன்ற பொருட்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒரு மாணவர் படுக்க வைத்த நிலையில், ஆசிரியர் ஸ்கேன் செய்வது போல் செய்து, அவரது வயிற்றுக்குள் புழுக்கள் இருப்பது போன்ற காட்சியை மற்ற மாணவர்களுக்கு காண்பிக்கிறார்.
வகுப்பறையில் நடந்த இந்த செய்முறையைவிட மாணவர்களின் எதிர்வினையே சமூக வலைதளங்களில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. சில குழந்தைகள் அச்சமடைந்த நிலையில் காணப்பட்டதுடன், சில மாணவர்கள் அழுத காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
இந்த வீடியோவை பகிர்ந்த சமூக வலைதளப் பயனர், குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்வது அவசியம் என்றாலும், அதற்காக பயத்தை உருவாக்கும் முறையை பயன்படுத்துவது சரியான அணுகுமுறையா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். சிறு வயதில் குழந்தைகளை அச்சுறுத்தும் வகையிலான காட்சிகள் அவர்களின் மனநிலையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்வதற்கான காரணங்களையும், அவற்றால் கிடைக்கும் நன்மைகளையும் விளக்குவது சிறந்த வழியாக இருக்கும் என்ற கருத்தும் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், இந்த வகுப்பறை முயற்சிக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை குழந்தைகள் புரிந்துகொள்ள, அதன் விளைவுகளை காட்சிப்படுத்துவது சில நேரங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.
ஜங்க் ஃபுட் குறித்த விழிப்புணர்வை குழந்தைகளிடம் ஏற்படுத்துவது முக்கியமானதாக இருந்தாலும், அதற்காக பயன்படுத்தப்படும் முறையும் கவனமாக தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதே இந்த விவாதத்தின் முக்கிய அம்சமாக மாறியுள்ளது.
Also Read: வாக்குறுதி கொடுத்துவிட்டு ஓடுவதா? விஜய் சேதுபதியின் பேச்சால் வெடித்த புதிய சர்ச்சை!



