தமிழ்நாடு கெட்டுக் குட்டிச் சுவரானதை மறைக்க, மத்திய அரசு மீது பழி போடும் ஸ்டாலின்…! இபிஎஸ் குற்றச்சாட்டு

ADMK Chief secretary Edappadi Palanisamy 2 1

தமிழ்நாடு கெட்டுக் குட்டிச் சுவரானதை மறைக்க, எதற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் பழிபோடுகிறார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பொறுப்பைத் தட்டிக்கழிப்பதிலும், அதை அடுத்தவர்கள் தலையில் ஏற்றி வைப்பதிலும், உலக அரசியல் தலைவர்களிலேயே முதல் இடத்தை வகிப்பவர்தான் ஏமாற்று மாடல் அரசின் முதல்வர் ஸ்டாலின் என்பதை அவரே பல விதங்களிலும் நிரூபித்து வருகிறார். அமெரிக்க அரசு தற்போது உயர்த்தியுள்ள இறக்குமதி வரியால் பாதிப்படைந்துள்ள திருப்பூர் பின்னலாடைத் தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் என்று பிரதமருக்கு, மு.க. ஸ்டாலின் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.

2021-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இன்றுவரை, இவர் ஜவுளி மற்றும் பின்னலாடைத் தொழில்களுக்கு ஏற்படுத்திய இடையூறுகள், பிரச்சனைகள் ஏராளம். அதனால், அந்தத் தொழில்கள் ஏற்கெனவே நலிவடைந்துள்ளன என்பதே உண்மை. வணிக நிறுவனக் கட்டடங்களுக்கு 150 சதவீதம் வரி உயர்வுடன், ஆண்டுதோறும் 6 சதவீத சொத்துவரி உயர்வு. தொழில் நிறுவனங்களுக்கு பலமுறை கடுமையாக மின் கட்டணங்களை உயர்த்தியதுடன், கூடுதலாக பீக் ஹவர் கட்டணம் உயர்வு மற்றும் நிலைக் கட்டணம் உயர்வு. 365 கிலோ பருத்தி பேலின் விலை 50 சதவீதத்திற்கும் கீழே குறைந்தபோதும், நூல் விலையில் ஸ்திரமற்ற தன்மை நிலவிய போதும், எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாதது. பருத்தி உற்பத்தியை ஊக்குவிக்க துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை.

வெளிநாட்டு சுற்றுப் பயணம் நான்கு முறை மேற்கொண்டும், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இயங்கும் ஜவுளித் தொழிலுக்கு எந்தவிதமான வெளிநாட்டு முதலீடுகளையும் ஈர்க்காதது. இந்நிலையில், உள்நாட்டு முதலீடும் பிற மாநிலங்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் வகையில் மத்தியப் பிரதேச முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், கோவை மற்றும் திருப்பூருக்கு நேரடியாக வருகை தந்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் (TEA), தென்னிந்திய ஆலைகள் சங்கம் (SIMA) மற்றும் இந்திய பருத்தி கூட்டமைப்பு (ICF) ஆகியவற்றுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, மத்தியப் பிரதேசத்தில் பருத்தி வளர்ச்சி வாரியத்தை நிறுவிடவும், எக்ஸ்ட்ரா லாங் ஸ்டேபிள் (ELS) பருத்தி உற்பத்தி மற்றும் பரப்பளவை அதிகரிக்கவும், மத்தியப் பிரதேசத்தின் ஆடைத் தொழிலுக்கான முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவிப்பதோடு, ஆடை உற்பத்தி நிறுவனங்களின் வளர்ச்சியை எளிதாக்கவும், திறன் மேம்பாட்டு வசதிகளில் ஆலோசனை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் SIMA மற்றும் TEA உடன் இணைந்து செயல்படும் வகையில் தமிழகத்தின் முதலீடுகள், வெளி மாநிலங்களுக்குச் செல்வதை வேடிக்கை பார்த்த அரசுதான் திமுக ஸ்டாலின் மாடல் ஃபெயிலியர் அரசு.

திமுக ஸ்டாலின் மாடல் ஃபெயிலியர் ஆட்சியில், மின் கட்டணம் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதாலும், கழிவு பஞ்சில் இருந்து தயாரிக்கப்படும் நூலிழைகளைப் பயன்படுத்தி காடா துணி, கலர் நூல்களில் போர்வை, மெத்தை விரிப்பு, லுங்கி, துண்டு, கால்மிதி உட்பட பல துணி வகைகளை தயாரிக்கப் பயன்படுத்தும் நூல்களை உற்பத்தி செய்யும் O.E எனப்படும் ஓப்பன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள், உற்பத்தி நிறுத்தப் போராட்டங்களை நடத்தின. இவர்களின் கோரிக்கைகளை விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஃபெயிலியர் அரசு கண்டுகொள்ளவே இல்லை.

இந்தியாவிலேயே தமிழ் நாட்டில், குறிப்பாக கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஸ்பின்னிங் மில்கள், ஓப்பன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் அதிக அளவில் உள்ளன. இந்த மில்கள் தமிழக மக்களுக்கு மட்டுமின்றி, பல லட்சக்கணக்கான வட மாநில மக்களுக்கும் அதிக அளவில் வேலை வாய்ப்புகளை வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாக விளங்கி வருகின்றன.ஆனால், விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஃபெயிலியர் அரசு, ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் வரிகளை உயர்த்தியும், அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்களை உயர்த்தியும், தொழில் முனைவோர்களையும், தொழிற்சாலைகளையும் முடக்கும் வகையில், கையாலாகாத திமுக அரசு, திறனற்ற வகையில் செயல்பட்டதன் காரணமாக தொழில் துறை ஏற்கெனவே நலிவடைந்து ஸ்தம்பித்துள்ளது.

அமெரிக்காவில் இந்தியப் பொருட்களை இறக்குமதி செய்பவர்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டும். இதனால், இந்திய பின்னலாடை அமெரிக்க சந்தையில் பிறநாட்டு ஜவுளிப் பொருட்களுடன் போட்டியிட முடியாமல் விற்பனை குறையும். எனினும் இங்கு, பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை தங்கு தடையில்லாமல் உற்பத்தியானால் தான் பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய முடியும்; நாட்டுக்கும் அந்நியச் செலாவணி கிடைக்கும்.ஆயத்த ஆடை தொழிலில் ஏற்பட்டுள்ள தொய்வைப் போக்க இந்த திமுக ஸ்டாலின் மாடல் ஃபெயிலியர் அரசு உடனடியாக ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

அரசு பள்ளிகளில் வருகையை பதிவு செய்யும் முறையில் சில மாற்றம்...! பள்ளி கல்வித்துறை அதிரடி...!

Mon Sep 1 , 2025
தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்களின் (எஸ்எம்சி) குழு உறுப்பினர்களின் வருகையை பதிவு செய்யும் முறையில் சில மாற்றங்களை பள்ளிக் கல்வித்துறை செய்துள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இயங்கிவரும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) 2024-ம் ஆண்டு மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. அதன்படி பெற்றோர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்களை உள்ளடக்கிய 20 உறுப்பினர்கள் கொண்ட குழுவாக எஸ்எம்சி மாற்றி அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளி […]
tn school 2025

You May Like