தமிழகத்தில் அனைத்து அரசு தொடர்பான நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பாக கட்டாயமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்பதற்கான தனித்தீர்மானம் இன்று சட்டமன்றத்தில் கொண்டு வரப்படுகிறது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மனோன்மணியம் சுந்தரனாரால் 1891ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ‘மனோன்மணியம்’ என்னும் புகழ்பெற்ற நாடக நூலில் இருந்தே தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தேர்ந்தெடுக்கப்பட்டது. கடந்த 1970-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் மூலம், அரசு விழாக்களின் தொடக்கத்தில் இப்பாடல் பாடும் நடைமுறை முதன்முதலில் பயன்பாட்டிற்கு வந்தது.
இதன் தொடர்ச்சியாக, மாநிலத்திலுள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்வு தொடங்குவதற்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழ்மொழிக்கும் தமிழர்களின் பண்பாட்டிற்கும் செலுத்தப்படும் தலையாய மரியாதையின் குறியீடாகும். இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளின் அடிப்படையில், தமிழகத்தின் தனித்துவமான பண்பாட்டு அடையாளத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே, அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை கட்டாயமாக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தனித்தீர்மானம் சட்டமன்றத்தில் இன்று கொண்டு வரப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Read More : கையில் “நாட்டாமை குடும்பம்” டாட்டூ இருக்கா? உடனே என்னை சந்திக்கலாம்..!! சரத்குமார் பரபரப்பு அறிவிப்பு..!!



