கடந்த 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற 17வது சட்டசபை தேர்தலில், சுமார் 85 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்த முறை வாக்குப்பதிவு அதிகரித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மொத்தம் 75,064 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள், 62 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, 240 அறைகள், 3,324 மேஜைகள் மற்றும் 10,545 பணியாளர்கள் மூலம் எண்ணப்பட்டு வருகின்றன.
காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்னப்பட்ட நிலையில், 8.30 முதல் இயந்திர வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி தவெக 94 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. இரண்டாவதாக அதிமுக 78 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. மூன்றாவதாக திமுக 54 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலை வகிக்கிறார்.
இதற்கிடையே சென்னையின் முக்கியமான சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றான சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி தொகுதியில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பின்னடைவை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைநகர் சென்னையின் பல தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் முன்னிலை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் மட்டுமின்றி திமுக அமைச்சர்கள் போட்டியிடும் பல தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகின்றனர். வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அடுத்தடுத்த சுற்றுகள் தேர்தல் முடிவுகளின் போக்கை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read more: விஜய் வீட்டுக்கு முன் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு.. உச்சக்கட்ட பரபரப்பில் தமிழ்நாடு..!



