தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் அரசியல் களத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் வேகமெடுத்து வருகின்றன. மொத்தம் 234 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் ஆட்சியமைக்க குறைந்தபட்சமாக 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவைப்படும் நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை கைப்பற்றியுள்ளது.
இதனால், ஆட்சியமைக்க மேலும் சில எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில், கட்சி மேலிடம் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்த சூழலில், தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க தமிழக வெற்றிக் கழகத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக காங்கிரஸ் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
திமுக கூட்டணியில் 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 5 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தற்போது திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலை ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, தவெகவின் ஆதரவு எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது.
இதே நேரத்தில், கம்யூனிஸ்ட் மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் தவெக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், கூடுதல் ஆதரவை பெறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 113 ஆதரவு எண்ணிக்கை கிடைத்துள்ள நிலையில், பெரும்பான்மை பெற இன்னும் சில எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலை உள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் தற்போது கூட்டணி கணக்குகளால் பரபரப்பாகியுள்ளது.



