திமுக சட்டமன்றக் கட்சி தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 7 ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் சட்டமன்றக் கட்சி அமைப்பில் முக்கியமான பதவிகளும் மாற்றப்பட்டன. அதன் படி, திமுக சட்டமன்ற துணைத் தலைவராக கே.என். நேரு நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், சட்டமன்ற கொறடாவாக எ.வ.வேலு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் நீண்ட காலமாக திமுகவின் முக்கிய நிர்வாகப் பொறுப்புகளில் செயல்பட்டு வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக முதலமைச்சராக விஜய் இன்று பதவி ஏற்ற நிலையில், தற்காலிக சபாநாயகர் கருப்பையாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவீந்திரநாத் அர்லேகர் இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதை தொடர்ந்து சட்டமன்ற நடைமுறைகளின்படி, புதிதாக தேர்வான அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு விழா நாளை காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. முதல்வராக விஜய் பதவியேற்றுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.
உதயநிதி ஸ்டாலின் கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இளைஞர் அணி பொறுப்பில் இருந்து தொடங்கி, தற்போது சட்டமன்றக் கட்சி தலைவராக உயர்த்தப்பட்டிருப்பது திமுகவின் புதிய தலைமுறை வளர்ச்சிக்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சட்டமன்றத்தில் திமுகவின் செயல்பாடுகளை மேலும் ஒருங்கிணைக்கும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Read more: முதற்கட்ட அமைச்சரவை பட்டியலில் இடம் பெறாத காங்கிரஸ்.. என்ன காரணம்? – செல்வப்பெருந்தகை விளக்கம்..!


