திராவிடம் என்றால் என்னவென்று தெரியாது என்று கூறிய பழனிசாமி, அதிமுக தலைமை பொறுப்பில் இருப்பது வெட்கக்கேடு என முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் நடந்த முப்பெரும் விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்; இது கரூர் அல்ல, திமுக ஊர். கொட்டும் மழையில்தான் அண்ணா இதேநாளில் வடசென்னை ராபின்சன் பூங்காவில் திமுகவை தொடங்கி வைத்தார். அதேபோல, இந்தக் கொட்டும் மழையில் உங்கள் எழுச்சியை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல உள்ளது. கரூர் மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி, இந்த விழாவை ஒரு மாநாடு போல ஏற்பாடு செய்துள்ளார். திமுக வரலாற்றில் இப்படியொரு பிரம்மாண்ட முப்பெரும் விழா நடந்திருக்காது.
திமுக ஆட்சிக்கு வந்தபோது ஏகப்பட்ட நெருக்கடிகளை கடந்து ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி, முதலீடுகளை ஈர்த்து, வேலை வாய்ப்புகளை உருவாக்கி, இந்தியாவிலேயே பொருளாதாரத்தில் இரட்டை இலக்கம் கொண்ட மாநிலமாக உருவாக்கி இருக்கிறோம். இதனால் தான் திராவிட மாடல் அரசை பார்த்தால் சிலருக்கு வயிறு எரிகிறது. வாய்க்கு வந்த அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர். அவர்களது கண்ணீர் ஆட்டுக்காக ஓநாய் வடிக்கும் கண்ணீர்.
பழனிசாமி ஆட்சி அதிகாரம் இருக்கும்போது எதுவும் செய்யாமல், தமிழக உரிமைகளுக்காக குரல் கொடுக்காமல் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தார். இப்போது எதிர்க்கட்சி என்ற மாண்பே இல்லாமல் தரம் தாழ்ந்து என்னை ஒருமையில் பேசுகிறார். ரெய்டுகளிலிருந்து காப்பாற்றிக்கொள்ள அதிமுகவை அடகு வைத்துவிட்டார். திராவிடம் என்றால் என்னவென்று தெரியாது என்று கூறிய பழனிசாமி, அதிமுக தலைமை பொறுப்பில் இருப்பது வெட்கக்கேடு. அதிமுக தொடங்கியபோது, தன்னுடைய கொள்கை அண்ணாயிசம் என்றார்கள். அதை பழனிசாமி அடிமையிசம்னு மாற்றி, இப்போது அமித் ஷாவே சரணம் என்று மொத்தமாக சரண்டராகிவிட்டார்.
முழுவதும் நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்பார்கள். நேற்று டெல்லியில் கார் மாறி மாறி முகத்தை மூடிக் கொண்டு போன பழனிசாமியை பார்த்து, காலிலே விழுந்த பிறகு முகத்தை மூட கர்ச்சீஃப் எதற்கு என்றுதான் எல்லோரும் கேட்கிறார்கள். மத்திய அரசின் செயல்களை நாம் துணிச்சலுடன் நேருக்கு நேர் எதிர்க்கிறோம். போராடி தலைநிமிர்ந்த தமிழகத்தை ஒரு நாளும் தலைகுனிய விடமாட்டேன் என்றார்.