அரசு மருத்துவமனைகளில் குறைந்த செலவில் சிகிச்சை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் செல்லும் ஏழை, எளிய மக்களுக்கு, சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் எதிர்பாராத உடல்நலப் பிரச்னைகள் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், கோவையில் ரத்தம் ஏற்றப்பட்ட பின்னர் தனது மகளுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டதாகக் கூறி, பல ஆண்டுகளாக போராடி வரும் தந்தை ஒருவர் தற்போது மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீருடன் புகார் அளித்துள்ளார்.
கோவை மாவட்டம் காடாம்பாடியைச் சேர்ந்த தந்தை ஒருவர், தனது மகளுக்கு அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு எச்.ஐ.வி தொற்று கண்டறியப்பட்டதாகக் கூறி, மாவட்ட ஆட்சியர் பவன்குமாரிடம் கண்ணீருடன் புகார் அளித்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு அந்தச் சிறுமிக்கு ரத்த சோகை ஏற்பட்டதால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டுள்ளது.
சிகிச்சைக்குப் பிறகு சில மாதங்கள் கழித்து மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் சிறுமிக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது தெரியவந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், தங்களுக்கும் மற்றொரு குழந்தைக்கும் எச்.ஐ.வி பரிசோதனை செய்துள்ளனர். அதில் அவர்களுக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில், அரசு மருத்துவமனையில் ஏற்றப்பட்ட ரத்தத்தின் மூலமாகவே மகளுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டிருக்கலாம் என பெற்றோர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் மற்றும் காவல்துறையிடம் பல ஆண்டுகளாக புகார் அளித்து வந்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தற்போது மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ள அவர்கள், வறுமையான குடும்பச் சூழ்நிலையில் எச்.ஐ.வி தொற்றுடன் போராடி வரும் தங்கள் மகளின் நிலையை கருத்தில் கொண்டு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், முதலமைச்சர் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு, தங்கள் குடும்பத்திற்கு இலவசமாக மனை அல்லது வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தத் தந்தை வலியுறுத்தியுள்ளார்.
Also Read: மனைவியிடம் மீண்டும் கேட்ட அந்த விஷயம்… ஆத்திரத்தில் கத்தியால் தாக்கிய கணவர்!



