மனிதனின் முதல் எதிரி ஆசை என்று சொன்னால் அது மிகையாகாது. ஆசை சில நேரங்களில் வெற்றியையும் மகிழ்ச்சியையும் கொடுத்தாலும், பல நேரங்களில் அதுவே பெரிய இழப்புகளுக்கும் காரணமாகி விடுகிறது. ஆசைக்காக வாழ்க்கையையே இழந்த பலரைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த வகையில், சிவகங்கை மாவட்டத்தில் ஒருவர் தனது ஆசையால் செய்த ஒரு செயல், இறுதியில் அவருக்கே பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தம்பிபட்டியை சேர்ந்தவர் 40 வயதான வடிவேல். பைனான்ஸ் அதிபரான இவருக்கு கடந்த மாதம் செல்போனில் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய கவிதா என்ற பெண் ஒருவர், தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாக கூறியுள்ளார். இதையடுத்து, கடந்த ஜூன் 9ம் தேதி வடிவேல், ரூ.4,500-ஐ ஜி-பே (Google Pay) மூலம் கவிதாவிற்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து, கவிதா மற்றும் வடிவேல் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசியுள்ளனர்.
ஒருகட்டத்தில், கவிதா “நீ காரைக்குடி வந்தால் நாம் உல்லாசமாக இருக்கலாம்” என்று ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதை நம்பிய வடிவேல், கடந்த ஜூன் 24-ஆம் தேதி காரைக்குடிக்கு சென்றுள்ளார். மேலும், “வா நாம் உல்லாசமாக இருக்கலாம்” என்று கூறி, பழைய ஓட்டு வீடு ஒன்றிற்கு கவிதா வடிவேலை அழைத்துச் சென்றுள்ளார். ஆசையோடு வீட்டிற்க்குள் சென்ற வடிவேலுவிற்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
ஆம், அந்த வீட்டிற்குள் சிலர் மறைந்திருந்தனர். அவர்களை கவிதா தான் அங்கே மறைந்திருக்க வைத்துள்ளார். இதை அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்த வடிவேலை அங்கிருந்த கும்பல் வலுக்கட்டாயமாக நிர்வாணமாக்கி கொடூரமாக தாக்கியுள்ளனர். மேலும், ரூ. 50 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால் வடிவேல் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் அவரிடமிருந்த ஹோண்டா இருசக்கர வாகனத்தையும், செல்போனையும் அந்த கும்பல் பறித்துள்ளனர்.
இதையடுத்து, வடிவேல் சம்பவம் தொடர்பாக காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், காரைக்குடி புதிய பேருந்து நிலையம் மற்றும் 50 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். இதையடுத்து, தலைமறைவாக இருந்த கவிதா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, மீதமுள்ள 3 குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Also Read: “ஒழுங்கா வேலைக்கு போடி” கர்ப்பிணி மனைவியை பூரிக்கட்டையால் அடித்தே கொன்ற காதல் கணவன்.



