சென்னை சைதாப்பேட்டை பகுதியில் தாடர்ந்தர் நகர் மைதானம் அருகே சத்யமூர்த்தி & கோ என்ற புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடப் பணியின் காரணமாக, அங்கே கொள்முதல் செய்து வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகள், பலகைகள் உள்ளிட்டவை அவ்வப்போது மாயமானதாக கூறப்படுகிறது.
ஆகவே இங்கு வந்து பொருட்களை திருடிச் செல்வது யார் என்று தெரியாமல் கட்டிட பணியாளர்கள் முதல் கொண்டு ஒப்பந்ததாரர் வரையில் மிகுந்த குழப்பத்தில் இருந்திருக்கிறார்கள்.இந்தத் திருட்டை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று முயற்சி செய்த அவர்கள் நேற்று இரவு அந்த கட்டிடத்திலேயே யாருக்கும் தெரியாமல் மறைந்திருந்து கண்காணித்து வந்தார்கள்.
இந்த சூழ்நிலையில்தான் நேற்று இரவு இந்த கட்டிடத்திற்குள் புகுந்த ஒரு பெண் உட்பட 3 பேர் கொண்ட கும்பல் கட்டிட பணிக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு, பலகையை திருடிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி செல்வதை பார்த்திருக்கிறார்கள்.
ஆகவே உடனடியாக அந்த இருசக்கர வாகனத்தை அவர்கள் மடக்கி பிடித்து இருவரையும் விசாரித்து இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து பிடிபட்ட 2 இளைஞர்களை இரும்பு கம்பி மற்றும் உருட்டு கட்டையால் அடித்து விசாரித்துக் கொண்டிருந்தபோது அவர்கள் சைதாப்பேட்டை வெங்கடாபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வரும் சாகின்ஷா காதர்(21) மற்றும் 16 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது.
இவர்களை கடுமையாக அந்த பணியாளர்கள் தாக்கியதால் சாஹின்ஷா காதர் சம்பவ இடத்திலேயே மயங்கி சரிந்துள்ளார். இதனால் பயந்து போன ஊழியர்கள் உடனடியாக அவரை சைதாப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும் இது குறித்து சைதாப்பேட்டை மருத்துவமனையின் சார்பாக காவல் துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதன் பேரில் சைதாப்பேட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பிறகு காவல்துறையினர் விசாரணை நடத்தி கொலை வழக்கு பதிவு செய்து இந்த வழக்கு தொடர்பாக கட்டிடத்தின் பொறியாளர் உமா மகேஸ்வரன், ஜெயராம், நம்பிராஜ், பாலசுப்பிரமணியன், சக்திவேல், மனோஜ், அஜித், பணியாளர் சிவப்பிரகாசம் போன்ற 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.