திண்டுக்கல் அருகே மது போதைக்கு அடிமையான கணவனுடன் வாழ மறுத்த மனைவியை கழுத்தை அறுத்து, கொடூரமாக கொலை செய்ய முயற்சி செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமு, இவருடைய மனைவி விஜயலட்சுமி . இந்த தம்பதிகளுக்கு, 10 வருடங்களுக்கு முன்னர், திருமணம் நடைபெற்றது. மேலும், இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். ராமு ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.
மேலும், இவர் குடிப்பதற்கு அடிமையானதால், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். அதோடு, கேரளாவில் தங்கி ராமு ஓட்டுனராக பணியாற்றி வருகிறார் என்று சொல்லப்படுகிறது.
கணவன் குடித்துவிட்டு வந்து, அவ்வபோது தகராறு செய்ததால், விஜயலட்சுமி தன்னுடைய தாயின் வீட்டிற்கு சென்று, கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதற்கு நடுவே, வத்தலகுண்டுவில் உள்ள விஜயலட்சுமியின் தாய் வீட்டுக்கு வந்த ராமு, தனது மனைவியை தன்னோடு சேர்ந்து வாழ வருமாறு அழைத்திருக்கிறார்.
ஆனாலும், குடிக்காமல் வேலைக்கு சென்று வந்தால் மட்டுமே, நான் உங்களுடன் வாழ முடியும். இல்லையென்றால், வர முடியாது என்று விஜயலட்சுமி தெரிவித்திருக்கிறார். இதனை தொடர்ந்து, ஆத்திரம் கொண்ட ராமு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, விஜயலட்சுமியின் கழுத்தை அறுத்து இருக்கிறார். இதில் விஜயலட்சுமி, சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்து இருக்கிறார்கள்.
அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், இரத்த வெள்ளத்தில் இருந்த விஜயலட்சுமியை மீட்டு, வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன் பிறகு, மேல் சிகிச்சைக்காக அவர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக வத்தலகுண்டு காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். அதோடு, கழுத்தை அறுத்து மனைவியை கொலை செய்ய முயற்சி செய்த ராமுவை வத்தலகுண்டு காளியம்மன் கோவில் அருகே, காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.