விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்த உடனேயே பயிர்கடன் வழங்கும் மாநில அளவிலான திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்தில் நேற்று தொடங்கி வைத்தார்.
விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்த உடனேயே பயிர்கடன் வழங்கும் மாநில அளவிலான திட்டத்தின் தொடக்க விழா தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான் கோட்டையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டுறவுத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், இணைய வழியில் பயிர் கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர், அந்த வளாகத்தில் செயல்படும் இ-சேவை மையத்தை நேரில் ஆய்வு செய்து விவரங்களை கேட்டறிந்தார்.
தேவையான ஆவணங்கள்
தமிழகத்தில் பயிர்க் கடன் பெறுவதற்கு, விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகலாம். அங்கு, அவர்கள் கடன் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற அடையாள அட்டைகள் சமர்ப்பிக்க வேண்டும். நிலத்தின் உரிமையை உறுதிப்படுத்தும் பட்டா, சிட்டா போன்ற ஆவணங்கள் இருக்க வேண்டும். கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினராக இருக்க வேண்டும்.