தமிழக அரசியலில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இன்று டெல்லி செல்கிறார். இன்று (மார்ச் 2) காலை 10:45 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படும் அவர், டெல்லியில் பாஜக மேலிடத்துடன் தொகுதிப் பங்கீடு குறித்து இறுதி கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, கோவை தெற்கு, மொடக்குறிச்சி, நெல்லை, நாகர்கோவில் ஆகிய 4 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி சுமார் 18 சதவீத வாக்குகளைப் பெற்றதையும், 10 தொகுதிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்ததையும் சுட்டிக்காட்டி, இம்முறை கூடுதல் தொகுதிகளைப் பெற அக்கட்சி முனைப்பு காட்டி வருகிறது. தமிழகத்தில் தங்களது செல்வாக்கு உயர்ந்துள்ளதைக் காரணமாக கூறி, சுமார் 40 தொகுதிகள் வரை பாஜக தரப்பில் கோரப்படுவதாகத் தெரிகிறது. இருப்பினும், அதிமுக தரப்போ 24 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை தொடர்ந்து, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே முதற்கட்ட ஆலோசனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, பாஜகவின் முக்கிய வியூக நிபுணரான மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்து, தொகுதிப் பங்கீட்டில் உள்ள இழுபறியைத் தீர்க்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். அமமுகவின் டிடிவி தினகரன் இம்முறை கூட்டணியில் இணைந்துள்ளதால், தொகுதிகளைப் பிரித்து வழங்குவதில் அதிமுக மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறது.
கடந்த தேர்தலில் அதிமுக 179 தொகுதிகளில் நேரடியாகக் களம் கண்டது. இம்முறையும் 170 முதல் 180 இடங்கள் வரை தங்களது வசம் வைத்துக்கொண்டு, எஞ்சிய இடங்களைப் பாமக, பாஜக, அமமுக மற்றும் பிற சிறிய கட்சிகளுக்குப் பிரித்து வழங்க அதிமுக தலைமை விரும்புகிறது. குறிப்பாக, பாமக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கு இரண்டு இலக்க எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இந்தச் சூழலில், டெல்லியில் நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தை, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தை நிர்ணயிக்கும் முக்கிய நகர்வாக கருதப்படுகிறது.



