திருமணமான நபர்கள் விவாகரத்து பெறாமல் மற்றொருவருடன் சேர்ந்து வாழ்வது சட்டப்படி செல்லாது என அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், இதே நீதிமன்றத்தின் மற்றொரு அமர்வு முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்திருப்பது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
உத்தர பிர்தேச மாநிலத்தைச் சேர்ந்த ஆண், பெண் இருவரும் தனித்தனியாக திருமணம் ஆனவர்கள். பின்னர் தங்களது வாழ்க்கைத் துணைகளை பிரிந்து, ‘லிவ்-இன்-ரிலேஷன்ஷிப்’ முறையில் ஒன்றாக வாழத் தொடங்கினர். உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி போலீஸ் பாதுகாப்பு கோரி அவர்கள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விவேக் குமார் சிங் கூறியதாவது: விவாகரத்து பெறாமல் மற்றொரு நபருடன் வாழ்வது சட்டப்படி ஏற்க முடியாது. தனிநபர் சுதந்திரம் என்பது முழுமையானது அல்ல. ஒருவரின் சுதந்திரம், மற்றொருவரின் சட்ட உரிமையை பாதிக்கக்கூடாது. இதனால், “சட்டத்திற்கு எதிரான உறவுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது” எனக் கூறி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதே அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் மற்றொரு அமர்வு வேறொரு வழக்கில் முற்றிலும் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளது. 18 வயது பெண் மற்றும் ஏற்கனவே திருமணமான ஆண், பாதுகாப்பு கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்:சட்டம் மற்றும் ஒழுக்கம் இரண்டும் வேறு, சம்மதத்துடன் இருக்கும் லிவ்-இன் உறவு குற்றமாகாது, சமூக கருத்துகளின் அடிப்படையில் நீதிமன்றம் முடிவு எடுக்க முடியாது.
இதனால், அந்த ஜோடியை கைது செய்ய இடைக்கால தடை விதித்து, அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டனர். ஒரே நீதிமன்றத்தில் இரண்டு மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கப்பட்டிருப்பது, தற்போது சட்ட நிபுணர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


