தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே நல்லப்பநாயக்கனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (25). ஒரு சலூன் கடையில் வேலை செய்து வருகிறார். பாகிபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி (23) என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
நாளடைவில் முருகேசனுக்குத் தனது மனைவி விஜயலட்சுமியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று விஜயலட்சுமிக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. அதனால் அவரைச் சிகிச்சைக்காகப் பாப்பாரப்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு முருகேசன் அழைத்துச் சென்றுள்ளார்.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் போது பாப்பாரப்பட்டி ஏரிக்கரை அருகே உள்ள பொதுக் கழிப்பறை பகுதிக்கு விஜயலட்சுமியை முருகேசன் வலுக்கட்டாயமாக அழைத்து சென்றுள்ளார். அங்கு யாரும் இல்லாததை அறிந்த முருகேசன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜயலட்சுமியின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த விஜயலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மனைவி உயிரிழந்ததை உறுதி செய்த முருகேசன், அதே கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த சிலர் கழிப்பறை வளாகத்திற்குள் பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதையும், இளைஞர் கழுத்தறுபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதையும் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், முருகேசனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த விஜயலட்சுமியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: தினமும் வேகவைத்த முட்டை சாப்பிடுங்க.. உங்களை தேடி இத்தனை நன்மைகள் வரும்..!



