2026 தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் மட்டுமல்லாது ஊடக வட்டாரத்திலும் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக தேர்தலுக்கு முன்பு செய்யப்பட்ட அரசியல் கணிப்புகள் மற்றும் அவற்றின் தாக்கம் குறித்து சமூக வலைதளங்களில் மீண்டும் பரபரப்பு நிலவுகிறது.
இதனிடையே ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே தொடர்பான பழைய பேச்சுகள் மற்றும் கருத்துகள் சமூக வலைதளங்களில் மீண்டும் பகிரப்பட்டு வருகின்றன. முன்னாள் செய்தி வாசிப்பாளராகவும், பின்னர் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகள் மற்றும் அரசியல் கருத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த பாண்டே, தமிழக அரசியல் குறித்து தொடர்ந்து கருத்துகள் தெரிவித்து வருபவராக அறியப்படுகிறார்.
தேர்தலுக்கு முன்பு பல்வேறு ஊடக விவாதங்களில் அவர் தெரிவித்திருந்த அரசியல் கணிப்புகள் மற்றும் நிலைப்பாடுகள் தற்போது மீண்டும் பேசுபொருளாகி வருகின்றன. “விஜய் முதலமைச்சராகவும் மாட்டார், குறைந்தபட்சம் எதிர்க்கட்சி தலைவராகவும் கூட வரமாட்டார். ” என்று பாண்டே கூறியிருந்தார். அதுமட்டுமல்லாது தவெக குறைந்தது 10 சீட் வென்றால் இனி அரசியல் பேச மாட்டேன் எனவுக் சவால் விட்டிருந்தார். இந்த நிலையில் ரங்கராஜ் பாண்டேவின் பேட்டிகளை பதிவிட்டு இணையவாசிகள் திட்டி தீர்த்து வருகின்றனர்.
தமிழக மக்கள் ஒரு புதிய தலைமையை நோக்கி நகர்வதை ஒரு மூத்த பத்திரிகையாளர் ஏன் அடையாளம் காண தவறிவிட்டார். மக்களின் மனநிலையை புரிந்து கொள்ளாதவர்கள் எப்படி ஒரு நடு நிலை செய்தியாளராக இருக்க முடியும் என கேள்வி எழுப்பி வருகின்றனர். பத்திரிகையாளர் என்பவர் மக்களின் நாடி துடிப்பை அறிபவராக இருக்க வேண்டும்; மாறாக தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை கணிப்புகளாக திணிக்க கூடாது என்கின்றனர்.
“சொன்னீங்களே, செய்வீர்களா ரங்கராஜ் பாண்டே?” என்ற வாசகம் இன்று தவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் குரலாக மாறியுள்ளது. தனது சவாலின்படி அவர் அரசியலை பற்றிப் பேசுவதை நிறுத்திக் கொள்வாரா அல்லது தனது கணிப்பு தவறு என்று பகிரங்கமாக ஒப்புக்கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



