தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக தனித்து 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக இடங்களை கைப்பற்றிய கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. இதற்கிடையே தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் தவெகவுக்கு ஆதரவு113 ஆக கூடியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.. ஆனால் போதிய பெரும்பான்மை இல்லாததால் ஆளுநர் இதுவரை ஆட்சியமைக்க விஜய்க்கு அழைப்பு விடுக்கவில்லை. இதற்கிடையே இரண்டாவது முறையாக தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்திக்க உள்ளார். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
வேளச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன், 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும். இது மக்கள் அளித்த தீர்ப்பு என்பதால், அந்த உரிமையை மதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், விஜய் முதல்வராக பதவி ஏற்கும் நடைமுறை சரியான அரசியல் நடைமுறையாக இருக்கும் என்றும், பெரும்பான்மையை அவர் சட்டமன்றத்தில் நிரூபிக்க வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளார். “அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி ஆட்சி அமைப்பது தான் ஜனநாயகத்தின் அடிப்படை” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாஜக தலையீட்டால் விஜய் பதவியேற்பு தொடர்பான நடைமுறையில் குழப்பம் ஏற்படுத்தப்படுவதாகவும் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். ஆளுநர் செயல்பாடுகள் அரசியல் குழப்பத்தை உருவாக்கும் வகையில் இருப்பதாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். விஜக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, கடிதம் வந்துள்ளது. ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளதாக தெரிவித்தார்.
Read more: விஜய்க்கு வழங்கப்பட்ட உயர்மட்ட பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது ஏன்..? தவெக நிர்மல்குமார் விளக்கம்..!



