தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்ற தவெக தலைவர் விஜய், பதவியேற்பு விழா நிறைவடைந்ததைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்து அதிகாரப்பூர்வ அலுவல் பணிகளை தொடங்கினார். கட்சி தொடங்கி வெறும் 27 மாதங்களிலேயே தமிழகத்தின் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ள விஜயின் அரசியல் பயணம் தற்போது நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.
சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பதவியேற்பு விழாவில் தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட விஜய், பின்னர் நேரடியாக தலைமைச் செயலகத்திற்கு சென்றார். தலைமைச் செயலகத்திற்கு வந்த முதலமைச்சர் விஜயை தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.
தொடர்ந்து முதலமைச்சருக்கான அலுவலக அறைக்குள் சென்ற விஜய், முதல்வர் நாற்காலியில் அமர்ந்து தனது அலுவல் பணிகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். அங்கு பல முக்கிய கோப்புகளையும் பார்வையிட்டதாக கூறப்படுகிறாது. மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுக்கு ஆரம்ப கட்ட ஆலோசனைகளும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக இருந்த விஜய், அரசியலுக்கு வந்து மிகக் குறுகிய காலத்திலேயே தமிழகத்தின் முதலமைச்சராக உயர்ந்திருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. “கட்சி தொடங்கிய 27 மாதங்களில் ஆட்சிக்கு வந்த தலைவர்” என தவெக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த தேர்தலில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் ஆதரவே மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். “தமிழக அரசியலில் புதிய தலைமுறை மாற்றம்”, “உலகமே திரும்பிப் பார்த்த தமிழ்நாடு” போன்ற கருத்துகளும் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள விஜய் தலைமையிலான அரசு, அடுத்தடுத்த நாட்களில் எத்தகைய முக்கிய முடிவுகளை எடுக்கப் போகிறது என்பது தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



