தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள தவெக தலைவர் விஜய், தனது முதல் உரையிலேயே “தமிழ்நாடு கஜானா காலியாக உள்ளது. 10 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி வைத்துள்ளனர்” என பேசியிருந்த நிலையில், அதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ள மு.க.ஸ்டாலின், முதலில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்ததுடன், அவர் கையெழுத்திட்ட மக்கள் நல அறிவிப்புகளையும் வரவேற்றுள்ளார். அந்த பதிவில், “தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, “எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்” என விமர்சித்துள்ளார். “கோவிட், வெள்ளம் போன்ற பல்வேறு சவால்களையும், ஒன்றிய பாஜக அரசின் ஓரவஞ்சனையையும் சமாளித்துதான் திமுக அரசு எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றியது” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விஜய் தனது முதல் உரையில் கூறிய “10 லட்சம் கோடி கடன்” குறித்த கருத்துக்கு பதிலளித்த ஸ்டாலின், “அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்து கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்டிலேயே தெளிவாக விளக்கப்பட்டிருந்தது. அதற்குப் பிறகுதானே நீங்கள் பல தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீர்கள்? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீர்கள்” என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், “நடைமுறைக்கு சாத்தியமானவற்றை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன் என கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள், தற்போது தான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றுவது என்பதை நீங்களும் கற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன்” என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இறுதியாக, “தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர தங்களின் ஆட்சிக்கு மீண்டும் வாழ்த்துகள்” என கூறி தனது பதிவை நிறைவு செய்துள்ளார்.



