தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்றார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில், ஆளுநர் ஆர்.என். ரவீந்திரநாத் அர்லேகர் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, விஜய்யுடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். இதில் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஏ. செங்கோட்டையன், சிவகாசி எம்.எல்.ஏ கீர்த்தனா உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.
ஆனால் முதல் கட்ட அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் கூட இடம்பெறாதது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது, “முதல் பட்டியலில் காங்கிரஸ் இடம்பெறவில்லை. ஆனால் இரண்டாவது பட்டியலில் அரசின் ஒரு அங்கமாக நாங்கள் இருப்போம். இதை தொடர்ந்து வலியுறுத்துவோம்” என்றார்.
மேலும் தவெக அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு தொடரும் என்றும் அவர் தெரிவித்தார். அதோடு, விஜய்க்கும் புதிய அமைச்சரவைக்கும் காங்கிரஸ் சார்பாக வாழ்த்துகள் தெரிவித்த அவர், கூட்டணி தொடர்பான முடிவுகள் உயர்மட்டக் குழுவால் தீர்மானிக்கப்படும் என்றும் கூறினார். அமைச்சரவையில் துறை ஒதுக்கீடு குறித்தும் விரைவில் முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
திமுகவுடன் நீண்ட கால கூட்டணி இருந்தது குறித்து எழுந்த கேள்விகளுக்கு பதிலளித்த செல்வப்பெருந்தகை, “மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் திமுக தலைவர்களுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்பட்டது. இது பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டே வந்தோம்” என விளக்கம் அளித்தார்.
மேலும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து எழுந்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “முதலமைச்சர் விஜய் தெளிவாக கூறியுள்ளார். கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவோம் என்று உறுதி அளித்துள்ளார். அதற்காக காத்திருக்க வேண்டும்” என தெரிவித்தார்.
Read more: வைரஸ் பாதித்த சொகுசுக் கப்பல்.. அனைத்து பயணிகளும் ‘அதிக ஆபத்து தொடர்பாளர்கள்’ என WHO அறிவிப்பு..!



