நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் பத்து கிராமத்தில் தாத்தா வீட்டிற்கு விடுமுறைக்காக வந்திருந்த 4 வயது சிறுவர்கள் இருவர் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவலின்படி, வீட்டின் அருகே கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு இருந்த மூடப்படாத தரைமட்ட தண்ணீர் தொட்டியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் தவறி விழுந்துள்ளனர். சிறுவர்கள் நீண்ட நேரமாக காணாமல் போனதால் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் பல இடங்களில் தேடியுள்ளனர்.
பின்னர் கட்டுமானப் பகுதியில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் பார்த்தபோது, இரு சிறுவர்களும் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர், சிறுவர்களின் உடல்களை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
குழந்தைகளின் சடலத்தை பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாத்தா வீட்டிற்கு கோடை விடுமுறைக்காக சென்ற குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



