2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், மாநில அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய தேர்தலாக பார்க்கப்படுகிறது. நடிகரும் தவெக தலைவருமான விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலிலேயே 108 இடங்களை கைப்பற்றி தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது.
ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் மே 4ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், மாநிலம் முழுவதும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தேர்தலில் சுமார் 85.1 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்த வாக்காளர் பங்கேற்பு இது என கூறப்படுகிறது.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சுமார் 34.92 சதவீத வாக்குகளை பெற்று, தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது. பல இடங்களில் இளைஞர்கள் மற்றும் முதல் முறையாக வாக்களித்த வாக்காளர்களின் ஆதரவு அதிகமாக கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில்,பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இந்த வெற்றி குறித்து விமர்சனங்களை முன்வைத்தார். அன்புமணி ராமதாஸ் பேசுகையில், “விஜயின் வெற்றி சுனாமி எல்லாம் இல்லை. எட்டு மாவட்டங்களில் தவெக ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. மக்கள் மாற்றம் வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்துள்ளனர். அதனை மிகப்பெரிய அரசியல் அலை என்று கூற முடியாது” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில் பாரம்பரிய கட்சிகளின் மீதான அதிருப்தியே இந்த தேர்தல் முடிவுகளில் பிரதிபலித்துள்ளதாகவும், மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். தேர்தல் முடிவுகளை ஒரு நிரந்தர அரசியல் நிலையாக பார்க்க முடியாது என்றும், அடுத்தடுத்த தேர்தல்களில் அரசியல் சூழ்நிலை மாறக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.



