ஆப்பிரிக்க நாடுகளில் மீண்டும் எபோலா வைரஸ் பரவல் குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவல் உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. காங்கோ மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் எபோலா பாதிப்பு சந்தேகத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை 600 ஆக உயர்ந்துள்ளதாகவும், 139 பேர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் எபோலா பாதிப்பு பதிவாகியுள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான அவசர சுகாதார ஆலோசனையை வெளியிட்டது. குறிப்பாக காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் போன்ற நாடுகளில் இருந்து வரும் அல்லது அந்த நாடுகள் வழியாக பயணம் செய்பவர்கள் உடல்நலக் குறைபாடுகள் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பொது இயக்குநரகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி, காய்ச்சல், கடும் சோர்வு, தலைவலி, தசை வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, தொண்டை வலி அல்லது காரணமின்றி இரத்தப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டால், சோதனைக்கு முன்பே விமான நிலைய சுகாதார அதிகாரிகளை அணுக வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், எபோலா நோயாளியின் இரத்தம் அல்லது உடல் திரவங்களுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கக்கூடியவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியா வந்த பிறகு 21 நாட்களுக்குள் அறிகுறிகள் தென்பட்டாலும் உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும் என்றும், பயண வரலாற்றை சுகாதார அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் ஆலோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச சுகாதார விதிமுறைகளின் அடிப்படையில், விமான நிலையங்களில் சுகாதார பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பயணிகள் அனைவரும் அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் எனவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Read more: Breaking : IUML எம்.எல்.ஏ அமைச்சராகிறார்..! காதர் மொய்தீன் அறிவிப்பு..! ஷாக்கில் திமுக..!



