மனித உடலில் ஒரு நொடியும் ஓய்வில்லாமல் இயங்கும் உறுப்புகளில் இதயம் மிக முக்கியமானது. ஒரு கைப்பிடி அளவுக்கு மட்டுமே இருக்கும் இந்தத் தசை உறுப்பு, உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் தொடர்ந்து இரத்தத்தை அனுப்பி உயிர் செயல்பாடுகளை சீராக வைத்திருக்கிறது. இதயம் மற்றும் இரத்த நாளங்கள் இணைந்து உருவாக்கும் இதய-இரத்த நாள அமைப்பே மனித உடலின் செயல்பாட்டின் அடிப்படை சக்தியாகக் கருதப்படுகிறது. ஆனால், உடலின் மற்ற உறுப்புகளைப் போல இதயத்தில் புற்றுநோய் ஏற்படுவது மிகவும் அரிது என்பது மருத்துவ உலகையே ஆச்சரியப்படுத்தும் உண்மையாகும்.
இதுகுறித்து இதய நோய் நிபுணரும் இதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் டிமிட்ரி யரனோவ் முக்கிய விளக்கத்தை வழங்கியுள்ளார். மே 16ஆம் தேதி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “பல இதய நிபுணர்கள் தங்களின் முழு மருத்துவ வாழ்க்கையிலும் ஒரு உண்மையான முதன்மை இதயப் புற்றுநோய் நோயாளியைக் கூட நேரில் பார்க்காமல் ஓய்வு பெறக்கூடும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதயம் இயற்கையாகவே புற்றுநோயை எதிர்க்கும் திறன் கொண்ட உறுப்புகளில் ஒன்றாக இருப்பதாகவும் அவர் விளக்கியுள்ளார்.
அவரது கூற்றுப்படி, இதயத் தசை செல்கள் இளமைக் காலத்திற்குப் பிறகு மிகக் குறைவாகவே பிரிவடைகின்றன. பொதுவாக, மனித உடலில் செல்கள் மீண்டும் மீண்டும் பிரியும் போது ஏற்படும் பிறழ்வுகளே புற்றுநோய்க்கு முக்கிய காரணமாக அமைகின்றன. செல்கள் அதிகமாகப் பிரிந்தால், தவறான மரபணு மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பும் அதிகரிக்கும். ஆனால் இதயத் தசை செல்கள் அரிதாகவே புதுப்பிக்கப்படுவதால், புற்றுநோய் உருவாகக் காரணமான அந்த மாற்றங்கள் உருவாகும் வாய்ப்பும் மிகவும் குறைகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இதயம் தொடர்ந்து அதிக ஆற்றலுடன் இயங்கும் உறுப்பாக இருப்பதும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதயம் இடைவிடாமல் துடித்து கொண்டிருப்பதால், கட்டிகள் வளர ஏற்ற அமைதியான சூழல் அங்கு கிடைப்பதில்லை. இதனால், நுரையீரல், மார்பகம், பெருங்குடல் மற்றும் புரோஸ்டேட் போன்ற உறுப்புகளில் காணப்படும் அளவுக்கு இதயத்தில் புற்றுநோய் உருவாகுவது அரிது என்று டாக்டர் யரனோவ் கூறியுள்ளார்.
இருப்பினும், “இதயத்தில் புற்றுநோய் அரிது” என்பதனால் அது முழுமையாக பாதுகாப்பான உறுப்பு என்று கருதக்கூடாது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, புகைபிடித்தல், உடல் பருமன், அதிக கொழுப்பு கொண்ட உணவுமுறை, உடற்பயிற்சி இல்லாமை, அதிக மனஅழுத்தம் மற்றும் நாள்பட்ட அழற்சி போன்ற காரணிகள் இதய நோய் அபாயத்தையும் புற்றுநோய் அபாயத்தையும் ஒரே நேரத்தில் அதிகரிக்கின்றன. இதயத்தைப் பாதுகாக்கும் வாழ்க்கை முறைதான் உடலின் பல்வேறு நோய்களிலிருந்தும் நம்மைக் காக்கும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, தினசரி நடைபயிற்சி, சத்தான உணவு, போதுமான தூக்கம், மனஅழுத்த கட்டுப்பாடு மற்றும் புகை, மதுபான பழக்கங்களைத் தவிர்ப்பது போன்ற எளிய பழக்கவழக்கங்களே இதய ஆரோக்கியத்தை நீண்ட காலத்திற்கு பாதுகாக்க உதவும். “உங்கள் இதயத்தைப் பாதுகாப்பது என்பது புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதற்கான முதல் படியாகும்” என்றும் டாக்டர் யரனோவ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Read more: அழகு நிலையங்களில் ஊசி பயன்பாட்டுக்கு தடை.. அவை அழகுசாதன வகையில் வராது..! – CDSCO கடும் எச்சரிக்கை



