திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தொட்டாரெட்டி குப்பம் கிராமம், வெள்ளக்குளம் வயல்வெளிப் பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊத்துக்கோட்டை காவல் ஆய்வாளர் தேவராஜ் தலைமையிலான போலீசார், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்து தீவிர விசாரணையை தொடங்கினர்.
முதற்கட்ட விசாரணையில், கொலையானவர் ஆந்திர மாநிலம் நாகலாபுரம் அடுத்த சவரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அருணா (40) என்பது தெரியவந்துள்ளது. கணவரை இழந்த அருணாவின் மகன் மற்றும் மகள் இருவரும் பெங்களூருவில் ஐடி துறையில் பணியாற்றி வருகின்றனர். தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை அருகே உள்ள தனது உறவினர் வீட்டுத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக தாய் வீட்டிற்கு வந்திருந்த நிலையில், மர்ம நபர்களால் கடத்தி வரப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். அருணாவின் கழுத்து நெரிக்கப்பட்டிருப்பதோடு, அடையாளத்தை மறைப்பதற்காக அவரது முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்டு, கருப்பு கிரீஸும் பூசப்பட்டுள்ளது.
அதேநேரம், அருணா அணிந்திருந்த தாலி, கம்மல் உள்ளிட்ட தங்க நகைகள் அப்படியே இருப்பதால், இது நகைக்காக நடந்த கொலையல்ல என்பது உறுதியாகியுள்ளது. சம்பவ இடத்தில் சிக்கிய செல்போனை அடிப்படையாக கொண்டு, முன்பகை அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக இந்த கொலை அரங்கேற்றப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, வெங்கல் காவல் நிலையம் அருகே நடந்த வெட்டுக்கொலை, கடம்பத்தூரில் இறுதி ஊர்வல மோதலில் நிகழ்ந்த கொலை மற்றும் ஏடிஎம் கொள்ளையைத் தொடர்ந்து, தற்போது நடைபெற்றுள்ள இந்த ஆசிட் படுகொலை சம்பவம் திருவள்ளூர் மாவட்ட மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read More : என் பெயரை கெடுத்துட்டீங்க..! ரூ.1 கோடி நஷ்ட ஈடு கொடுங்க..! அமைச்சர் ஆதவ் வழக்கில் ஸ்டாலினுக்கு நோட்டீஸ்..!!



