ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பிளஸ்-2 படித்து வந்த 17 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய அவரது சித்தப்பாவை, காவல்துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
திருவாடானை வட்டாரத்தைச் சேர்ந்த அந்த மாணவி, தேவகோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று கொண்டு தனது பாட்டி வீட்டில் தங்கி வந்துள்ளார். அதே வீட்டில் மாணவியின் சித்தி மற்றும் சித்தப்பாவான மகேந்திரன் (39) என்பவரும் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத சூழலைப் பயன்படுத்தி மகேந்திரன் மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனிடையே, மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து தேவகோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு மாணவியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் 3 மாத கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்து மாவட்ட குழந்தைகள் நலக் குழுவிற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையை தொடர்ந்து, திருவாடானை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, மகேந்திரன் போக்சோ சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கின் தீவிர தன்மையை கருத்தில் கொண்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் அளித்த பரிந்துரையின் பேரில், குற்றவாளி மகேந்திரனைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்க மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டார். இதையடுத்து உத்தரவு நகல் முறைப்படி சார்வு செய்யப்பட்டு, மகேந்திரன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Read More : திருமணப் பரிசாக நிலவில் 1 ஏக்கர் நிலம்! வருங்கால மனைவிக்காக நாமக்கல் இளைஞர் செய்த வித்தியாசமான சம்பவம்!



