“இது ஏன்?”, “அது எப்படி?”, “நாம் எங்கே போறோம்?”, “அவர் ஏன் அப்படி செய்தார்?” என குழந்தை நாள் முழுவதும் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கிறதா? சில நேரங்களில் இது பெற்றோருக்கு சலிப்பாகத் தோன்றலாம். ஆனால், குழந்தையின் இந்த கேள்வி கேட்கும் பழக்கத்தை உடனே தடுக்காமல், அதன் பின்னால் இருக்கும் ஆர்வத்தை புரிந்துகொள்வது முக்கியம்.
சிறு வயதில் குழந்தைகள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறார்கள். அவர்களுக்கு தெரியாத விஷயங்களை கேள்விகள் மூலமாகவே கற்றுக்கொள்கிறார்கள். அதனால், குழந்தை தொடர்ந்து “ஏன்?” என்று கேட்பது அதன் ஆர்வத்தையும் புதிய விஷயங்களை அறிந்துகொள்ளும் முயற்சியையும் வெளிப்படுத்தலாம்.
இதுபோன்ற நேரத்தில் “சும்மா இரு”, “எத்தனை கேள்வி கேட்ப?” என்று தொடர்ந்து திட்டினால், குழந்தை கேள்வி கேட்பதையே தவிர்க்க ஆரம்பிக்கலாம். தனக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி பேசுவதற்கும் தயங்கலாம். அதற்கு பதிலாக, பெற்றோர்கள் குழந்தையின் வயதுக்கு ஏற்ற வகையில் எளிய பதில்களை வழங்கலாம்.
சில கேள்விகளுக்கு உடனடியாக பதில் தெரியவில்லை என்றால், “எனக்கும் தெரியவில்லை, இருவரும் சேர்ந்து தெரிந்துகொள்வோம்” என்று சொல்லலாம். இதன் மூலம் தெரியாத விஷயங்களைப் பற்றி கேட்பதில் எந்தத் தவறும் இல்லை என்ற எண்ணம் குழந்தைக்கு உருவாகும்.
அதேபோல், குழந்தை ஒரு கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டால் பொறுமையை இழக்காமல், அது ஏன் அந்த விஷயத்தில் தொடர்ந்து ஆர்வம் காட்டுகிறது என்பதை கவனிக்கலாம். சில நேரங்களில் குழந்தையின் கேள்விக்குள் இருக்கும் உண்மையான சந்தேகம், முதல் கேள்வியை விட முற்றிலும் வேறாக இருக்கலாம்.
குழந்தை கேள்வி கேட்கும் நேரத்தை ஒரு கற்றல் வாய்ப்பாக மாற்றுவதும் நல்லது. புத்தகங்கள் படிப்பது, சுற்றியுள்ள பொருட்களை கவனிப்பது, சிறிய பரிசோதனைகள் செய்வது போன்ற செயல்களில் குழந்தையுடன் சேர்ந்து ஈடுபடலாம்.
எனவே, குழந்தை எப்போதும் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தால் அதை உடனே குறும்பாக நினைத்து தடுக்க வேண்டாம். அந்தக் கேள்விகள்தான் குழந்தை புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளும் முதல் படியாக இருக்கலாம். பெற்றோர்கள் பொறுமையாகக் கேட்டு பதிலளிப்பது, குழந்தையின் கற்றல் ஆர்வத்தையும் பெற்றோருடனான திறந்த உரையாடலையும் வளர்க்க உதவும்.
Also Read: உங்க குழந்தைக்கு இந்த தின்பண்டங்கள் தர்றீங்களா? சுவைக்கு ஓகே.. ஆரோக்கியத்திற்கு பேராபத்து..!! பெற்றோர்களே உஷார்..!!



