தமிழக அரசியலில் முதல்வர் விஜய்க்கும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. சட்டப்பேரவையில் விஜய் பேசிய விவகாரத்துக்கு பதிலளித்த ஸ்டாலின், அவசரநிலை காலத்தில் தான் கைது செய்யப்பட்ட பின்னணி குறித்து விரிவாக பதிவிட்டதுடன், தனது தாடையை சுட்டிக்காட்டிய விஜய்யின் சைகைக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், அவசரநிலை காலத்தில் தனது கைது குறித்து விஜய் குறிப்பிட்டது சரிதான் என ஸ்டாலின் குறிப்பிட்டார். ஆனால், அந்தக் கைது எந்தச் சூழலில் நடைபெற்றது என்பதையும் அதன் பின்னணியில் இருந்த அரசியல் வரலாற்றையும் விஜய் புரிந்துகொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
1976 ஜனவரி 31ஆம் தேதி மு.கருணாநிதி தலைமையிலான திமுக அரசு கலைக்கப்பட்ட பின்னர், சென்னை கோபாலபுரத்தில் உள்ள தங்களது வீட்டுக்கு போலீசார் வந்ததாக ஸ்டாலின் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அப்போது அவர் வீட்டில் இல்லாததால், மறுநாள் மகன் திரும்பி வருவார் என்றும், அவரை தானே ஒப்படைப்பதாகவும் கருணாநிதி போலீசாரிடம் தெரிவித்ததாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
பின்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும், அங்கு மிகவும் மோசமான சூழலில் அடைத்து வைக்கப்பட்டதுடன், போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டதாகவும் ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார். லத்திகளால் தாக்கப்பட்டதுடன், காலணிகளால் உதைக்கப்பட்டதில் தனது தாடை எலும்பு முறிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவசரநிலை கால சிறைவாசத்தில் தன்னுடன் இருந்த முன்னாள் திமுக எம்.பி. சி.சிட்டிபாபுவும் தாக்குதலுக்கு உள்ளாகி சிறையிலேயே உயிரிழந்ததாக ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விவகாரத்துக்கு பின்னணி, கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் ஆற்றிய உரை. அந்த உரையில் திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த விஜய், சர்க்காரியா கமிஷன் மற்றும் அமலாக்கத்துறை ஆவணங்களையும் குறிப்பிட்டிருந்தார்.
விஜய்யின் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், சில பகுதிகளை சட்டப்பேரவை பதிவிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து ஏற்பட்ட அமளியில் திமுக எம்.எல்.ஏ.க்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
1976ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன், திமுக அரசு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்போதைய ஆட்சிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரித்தது. அந்தக் கமிஷன் தொடர்பான விவகாரங்களையும், அமலாக்கத்துறை ஆவணங்களையும் விஜய் ஊழலுக்கான ஆதாரங்களாக பயன்படுத்துவதாக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
அரசியல் குற்றச்சாட்டுகளுக்காக சட்டப்பேரவையை தேவையற்ற சர்ச்சைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என்றும், முதல்வருக்குரிய பொறுப்பையும் அவையின் கண்ணியத்தையும் விஜய் காக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சட்டம்-ஒழுங்கு, மாநில வளர்ச்சி மற்றும் தமிழகத்தின் உரிமைகள் தொடர்பான விவாதங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தனது தாடையை சுட்டிக்காட்டிய சைகை ஸ்டாலினை குறிவைத்து செய்யப்பட்டது அல்ல என விஜய் விளக்கம் அளித்துள்ளார். அந்த சைகை தன்னிச்சையாக நடந்தது என்றும், அதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் அவர் மறுத்துள்ளார்.
இந்த விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய தமிழக வெற்றிக் கழகம், ஸ்டாலினின் பதிவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் ‘தியாகி, சிறை சென்றவர்’ என்ற பிம்பம் தற்போது கேள்விக்குள்ளாகியுள்ளதாகவும், உண்மைகளை எதிர்கொள்ள முடியாமல் பதற்றம் ஏற்பட்டுள்ளதா என்றும் திமுக தலைவரை கடுமையாக விமர்சித்துள்ளது.
இதனால் விஜய் – ஸ்டாலின் இடையிலான அரசியல் மோதல் மீண்டும் தமிழக அரசியல் களத்தில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.
Also Read: லண்டன் புறப்பட்ட முதல்வர் விஜய்.. தனி விமானம் வேண்டாம், பயணிகள் விமானத்தில் பயணம்!



