மதுரை மாவட்டம் வரிச்சியூர் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த அய்யம்மாள் (50) என்பவர், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்ற தனது மகன் ராஜாவை (30) இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்று வீட்டின் பின்புறம் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவரை இழந்த அய்யம்மாளின் மகன் ராஜாவுக்குத் திருமணமாகி மனைவியும் ஒரு மகனும் உள்ள நிலையில், அவரது தொடர் குடிப்பழக்கம் காரணமாக மனைவி குழந்தையுடன் பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து வேலைக்குச் செல்லாமல் தினமும் மதுபோதையில் வீட்டிற்கு வந்து தாயிடம் தகராறு செய்து வந்த ராஜா, சுமார் 3 மாதங்களுக்கு முன்பு போதை தலைக்கேறிய நிலையில் தாய் அய்யம்மாளிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதில் கடும் ஆத்திரமடைந்த அய்யம்மாள், மகனைக் கீழே தள்ளிவிட்டு வீட்டிலிருந்த இரும்புக் கம்பியால் தலை மற்றும் கைகளில் சரமாரியாகத் தாக்கியதில் ராஜா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
மகன் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த தாய், கொலையை மறைக்கும் நோக்கில் வீட்டின் பின்புறம் செப்டிக் டேங்க் அமைப்பதற்காகத் தோண்டப்பட்டிருந்த குழியில் உடலைப் போட்டுப் புதைத்துள்ளார். தொடர்ந்து அக்கம் பக்கத்தினரிடம் மகன் வேலைக்காக வெளியூர் சென்றுவிட்டதாகக் கூறி நாடகமாடி வந்துள்ளார். இந்நிலையில், ஏற்கனவே 22 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள ராஜா கடந்த 3 மாதங்களாகத் தலைமறைவாக இருப்பது குறித்து சந்தேகமடைந்த கருப்பாயூரணி போலீசார், தாய் அய்யம்மாளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர் மகனை கொலை செய்து புதைத்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அய்யம்மாளை கைது செய்த போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



