கிருஷ்ணகிரியைச் சார்ந்த தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சார்ந்தவர் சுரேஷ். இவருக்கும் அம்மு என்பவருக்கும் திருமணம் ஆகி இந்த தம்பதியினருக்கு ஐந்து குழந்தைகள் இருந்தனர். சுரேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்த குடும்ப சச்சரவுகளின் காரணமாக மிகவும் மன உளைச்சலில் இருந்து இருக்கிறார் அம்மு.
இதனைத் தொடர்ந்து தனது வாழ்வை முடித்துக் கொள்ள முடிவெடுத்த அம்மு தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த கொடூர சம்பவத்தில் ரயில் முன் பாய்ந்த மூன்று பேரும் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் தன் இரண்டு மகள்களுடன் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.