சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகளான மகேஸ்வரிக்கு மேச்சேரி அருகே திமிரி கோட்டை பகுதியைச் சேர்ந்த மயில்சாமி (வயது 34) என்பவருடன், 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
மகேஸ்வரி முதல் முறை கர்ப்பமான போது மயில்சாமி ஆண் குழந்தை தான் பிறக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். ஆனால் பெண் குழந்தை பிறந்ததால் அதை காரணம் காட்டி மகேஸ்வரி உடன் அடிக்கடி சண்டை போட்டுள்ளார். அடுத்தடுத்த இரண்டு குழந்தைகளும் பெண் குழந்தைகளாக பிறந்ததால் மயில்சாமி ஆத்திரம் அடைந்துள்ளார்.
இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகறாறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் தகறாறு ஏற்படும் போதெல்லாம் பழனிச்சாமி தான் சமாதானம் செய்து வைத்துள்ளார். இதனிடையே கடந்த விநாயகர் சதுர்த்தி என்று கணவன் மனைவியிடையே வழக்கம் போல தகராறு ஏற்பட மகேஸ்வரி தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதனால் கோபமடைந்த மயில்சாமி நேற்று இரவு குடிபோதையில் அவரது மாமனார் வீட்டுக்குச் சென்று மனைவியை தன்னுடன் வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் மகேஸ்வரி தன்னுடன் வர மறுத்ததால் ஆத்திரமடைந்த மயில்சாமி தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது மாமனார் பழனிசாமி தடுத்துள்ளார்.
ஆத்திரமடைந்த மயில்சாமி தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாமனாரை சரமாரியாக குத்தியதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளியான மயில்சாமியையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.