ஈரோடு கிழக்கு தொகுதி சட்டசபை உறுப்பினராக இருந்தவர் திருமகன் ஈவேரா. இவர் கடந்த மாதம் மாரடைப்பால் திடீரென்று மரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.
திமுக அரசு ஆட்சிக்கு வந்து 21 மாதங்கள் நிறைவடைந்து இருக்கின்ற நிலையில், அந்த 21 மாத கால ஆட்சிக்கு மதிப்பெண் வழங்கும் விதமாக இந்த இடைத்தேர்தல் இருக்கும் என்பதால் இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கு திமுக முனைப்பு காட்டி வருகிறது. அதே போல அதிமுக கொங்கு மண்டலம் தன்னுடைய கோட்டை என்பதை நிரூபிக்கும் விதமாக இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று முழு முயற்சியுடன் களம் இறங்கி உள்ளது.
அதேபோல திமுக கூட்டணியின் சார்பாக காங்கிரஸ் கட்சியின் இ.வி.கே.எஸ் இளங்கோவன் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். அதிமுகவின் சார்பாக முன்னாள் சட்டசபை உறுப்பினர் தென்னரசு களம் காண்கிறார். அதோடு, தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சியும் இந்த இடைத்தேர்தல் களத்தில் இருக்கிறது.
எதிர்க்கட்சியான அதிமுக கொங்கு மண்டலத்தை எதிர்த்தரப்பிடம் இழந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது. ஆகவே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அவருடைய ஆதரவாள ர்கள் உள்ளிட்டோர் ஈரோட்டில் முகாமிட்டுள்ளனர் முதலமைச்சர் ஸ்டாலின் ஈரோடு தொகுதியில் 2 நாள் பிரச்சாரம் செய்கிறார். எடப்பாடி பழனிச்சாமி 5️ நாட்கள் பிரசாரம் செய்ய இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை ஈரோடு பிரச்சாரம் செய்வாரா? என்று கேள்வி எழுந்த நிலையில் அவர் இலங்கைக்கு சென்றுள்ளார். மேலும் அண்ணாமலை கர்நாடக மாநில தேர்தல் பணிகளையும் கவனித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், வருகின்ற 19ஆம் தேதி மற்றும் 20ம் தேதி உள்ளிட்ட தினங்களில் அதிமுகவின் வேட்பாளர் தென்னரசு அவர்களை ஆதரித்து அண்ணாமலை பிரச்சாரம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.